ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தின. அதன் பிறகு இஸ்ரேல் நேரடி தாக்குதலில் இருந்து ஒதுங்கிக்கொண்டது. அமெரிக்கா மட்டும் அடிக்கடி போர்நிறுத்தங்களை அறிவிப்பதும், பின்னர் தாக்குதல் நடத்துவதுமாக இருக்கிறது.
அமெரிக்காவிடம் இருக்கும் ஆயுதங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதால் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை குறைத்துக்கொண்டுள்ளது. அதேசமயம் ஹார்மூஸ் ஜலசந்தி அருகில் அமெரிக்கா போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்து ஈரான் ஆதரவு கப்பல்கள் செல்ல விடாமல் தடுத்து வருகிறது.
அமெரிக்க கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அதனை வான் தடுப்பு ஏவுகணை மூலம் அமெரிக்கா தடுத்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண ஈரான் புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறது.
அமெரிக்க போர்க்கப்பல்களை தாக்கும் வகையில் புதிய ஏவுகணைகளை தயாரிக்கும் வேலையில் ஈரான் இறங்கி இருக்கிறது. C430L என்ற இரகசியப் பெயரைக் கொண்ட இந்தத் திட்டம், ரஷ்யாவின் மிக அனுபவம் வாய்ந்த ஏவுகணை நிபுணர்கள் சிலரின் உதவியோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்கிறார்கள்.
மேலும், ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் செல்லும் க்ரூஸ் ஏவுகணைகளை (cruise missiles) இயக்கக்கூடிய ஒரு ரேம்ஜெட் உந்துவிசை அமைப்பை(ramjet propulsion system) உருவாக்குவதில் ஈரான் கவனம் செலுத்தி வருகிறது. இத்தகைய ஆயுதங்கள் அவற்றின் அதிவேகம் மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் தன்மை ஆகியவற்றின் காரணமாக, வான் பாதுகாப்பு அமைப்புகளால் கண்டறிவதற்கும், இடைமறித்து அழிப்பதற்கும் மிகவும் கடினமானதாக இருக்கும்.
இந்த திட்டம் கடந்த 2023ம் ஆண்டே தொடங்கிவிட்டது. இதில் ரஷ்யாவின் அரசு ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரொசோபோரோனெக்ஸ்போர்ட் (Rosoboronexport) மற்றும் ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான என்பிஓ மாஷினோஸ்ட்ரோயெனியா (NPO Mashinostroyenia) ஆகியவை ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் இதற்காக ரஷ்யா மற்றும் ஈரான் இடையே முறையான ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே, இந்த ஒத்துழைப்புக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இத்திட்டம் வழக்கமான ஆயுதப் பரிமாற்றங்களைத் தாண்டி, ஈரான் தனது சொந்த மேம்பட்ட ஏவுகணைத் திறனை உருவாக்குவதற்குத் தேவையான நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தை மாற்றுவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக அமைந்தது.
























