அமைச்சர் மன்னிப்பு: ``இனி இதுபோல நடக்கக் கூடாது" - மதுரையில் எம்.பி சு.வெங்கடேசன் பேட்டி!


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காத்திருப்போர் கூடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.26 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது. அந்தக் கட்டிடத்தின் திறப்புவிழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நிகழ்வு முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “இடதுசாரி கட்சிகள் மற்றும் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ ஆகியவற்றின் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பது தொடர்பாகக் கடந்த வாரம் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதற்கு இடதுசாரி கட்சிகள் சார்பில் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, முதலிலேயே அந்தச் சுற்றறிக்கையை அரசு வாபஸ் பெற்றது.

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை

இந்த நிலையில், நேற்றைய தினம் அமைச்சர் விஸ்வநாதன் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார். அரசு மன்னிப்பு கேட்டது மிக முக்கியமான ஒன்றாகும். இனி வரும் காலங்களில் கவனக்குறைவு என்ற காரணத்தைச் சொன்னாலும், இதுபோன்ற தவறான நடவடிக்கைகள் நிகழக்கூடாது என எதிர்பார்க்கிறோம். பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்பட்டால் தொழில் வாய்ப்புகள் கைவிட்டுப்போய்விடும் என்றும், ஆந்திராவுக்கே வாய்ப்புகள் அதிகமாகும் என்றும் பரவலாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இதுபற்றிப் பேசுவதும் விவாதிப்பதும் தவறு இல்லை.

ஆனால், பரந்தூர் விமான நிலையம் மட்டுமே தமிழ்நாட்டின் வளர்ச்சி சார்ந்த விஷயம் அல்ல. மதுரை விமான நிலையமும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானது. மதுரை விமான நிலையப் பணிகளுக்காக நான்கு ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். ரூ.80 கோடி ஒதுக்கினாலே பெரும் மாற்றம் நிகழும். ஆனால், அந்த தொகை இதுவரை ஒதுக்கப்படவில்லை.

பரந்தூர் விமான நிலையத்திற்காக 1500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை உடனடியாகக் கையகப்படுத்த முடிந்தது. ஆனால் மதுரை விமான நிலையத்திற்குத் தேவையான 80 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த முடியவில்லை.

ஒன்றிய அரசும் ‘நிலத்தைக் கொடுக்க மறுக்கிறீர்கள்’ என்றே பதில் அளிக்கிறது. வளர்ச்சி என்பது குறிப்பிட்ட பகுதியை மட்டும் சார்ந்து இருக்கக் கூடாது. அது பரந்துப்பட்டதாகவும் அமைய வேண்டும்.

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்
உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்

மதுரை விமான நிலையத்தின் ஓடு பாதை (Runway) விரிவாக்கம் செய்யப்படாமல் அடுத்தகட்ட வளர்ச்சி சாத்தியமில்லை. ஓடு பாதை விரிவாக்கத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்புதல்களும் பெறப்பட்டு விட்டன. ஆனால், விரிவாக்கப் பகுதியில் இரண்டு சிறிய கண்மாய்கள் குறுக்கிடுகின்றன. அந்தக் கண்மாய்களின் நிலத்திற்கு மாற்றாக வேறு நிலத்தைக் கொடுத்து வகை மாற்றம் செய்வோம் என்று இரண்டு ஆண்டுகளாகக் கூறி வந்தனர். ஆனால், அண்மையில் நடந்த கூட்டத்தில், அந்த இரண்டு கண்மாய்களும் குண்டாறு கால்வாயுடன் இணைக்கப்பட்டவை என்றும், அதனால் கால்வாய்க்கே மாற்றாக வேறு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஆறாவது ஆண்டாகப் புதிய காரணத்தைக் கூறுகிறார்கள். ஒரு கூட்டுக்குழு கூட்டத்தை நடத்தியிருந்தால் இந்தச் சிக்கலை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தீர்த்திருக்க முடியும்.

முந்தைய ஆட்சியில் நடந்தது போலவே தற்போதும் தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டும், போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை தனியார் நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் செய்யக்கூடாது என்பதே இந்தப் பிரச்னையின் முதன்மைப் புள்ளியாகும். தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்குவதை முடிவுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே பொதுமக்களுக்கும் சுகாதாரம் கிடைக்கும், அரசுக்கும் தலைவலி இல்லாமல் பட்ஜெட் செலவுகளும் குறையும்.

தற்போது மதுரை மாநகராட்சியில் அவுட்சோர்சிங்கிற்காக ஒரு ஆண்டுக்குச் செய்யப்படும் செலவில் 50 சதவீதத்தைச் செலவழித்தாலே இதைவிடச் சிறப்பாகத் தூய்மைப் பணியைச் செய்ய முடியும். எனவே, தனியார் நிறுவனங்களின் லாபத்தை மையமாகக் கொண்ட இந்த ஒப்பந்த முறையை மதுரைக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுமைக்கும் முறியடிக்க வேண்டும்.

மதுரை விமான நிலையம்

தொகுதி மறுவரையறைக்கான சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்படலாம் என்ற செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன. பாஜக மற்றும் அமித் ஷா கொண்டு வரத் திட்டமிடும் இந்த தொகுதி மறுவரையறைக் கோட்பாடு, தமிழ்நாட்டிற்கும் தென்னிந்தியாவிற்கும் இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும் மிகப்பெரிய பாதகத்தை உருவாக்கும். அதை முறியடிப்பது நம் அனைவரின் கடமையாகும். அதேபோல, மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பைக் சுட்டிக்காட்டி ‘போதிய மக்கள் தொகை இல்லை’ என்ற பழைய பதிலையே மீண்டும் கூறுகிறார்கள். ஆனால், இதைவிடக் குறைவான மக்கள் தொகை கொண்ட ஆக்ரா உள்ளிட்ட பல வட இந்திய நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, தென் தமிழகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் மிக அவசியமானவை.” என்றார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed