இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது அவர்களின் மத நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் நாட்டில் சில மாநிலங்களில் கல்வி கற்க வரும் இஸ்லாமிய மாணவிகள் கல்வி வளாகத்திற்குள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முந்தைய பா.ஜ.க ஆட்சியில் இத்தடை விதிக்கப்பட்டு இப்போது தடை நீக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் உத்தரப்பிரதேச நீதிமன்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில், தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப கல்வி நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஆடைக் குறியீட்டை மாற்ற எந்த மாணவருக்கும் உரிமை இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
பள்ளி நிர்ணயித்த சீருடையுடன் கூடுதலாக தலையில் முக்காடு அணிய அனுமதிக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடக் கோரி மாணவி ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கி இருக்கிறது. பிரயக்ராஜில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் இஸ்லாமிய மாணவி ஒருவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்தப் பெண் உயர்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்று, அதே கல்வி நிறுவனத்தில் பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கை கோரி இருந்தார்.
அம்மாணவி தனது தாயார் மூலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பள்ளி விதித்துள்ள சீருடையுடன் கூடுதலாக முக்காடு அணிய அனுமதிக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் உத்தரவிடவேண்டும் கோரி இருந்தார். முக்காடு(ஹிஜாப்) அணிவது இஸ்லாமிய நடைமுறையில் இன்றியமையாதது என்றும், மனுதாரர் அதே பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் அதை அணிந்து வருவதாகவும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இம்மனு நீதிபதிகள் ஜே.ஜே.முனீர் மற்றும் இந்திரஜித் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், “மனுதாரர் பல்வேறு வகுப்புகளின் ஹிஜாப் அணிந்து வந்த புகைப்படங்களை நாங்கள் ஆய்வு செய்துள்ளோம். அவரைத் தவிர, வேறு எந்த பெண் மாணவியும் தலையில் முக்காடு அணிவதில்லை. இந்தப் பிரச்னை நாட்டில் எங்கு எழுந்தாலும், உயர் நீதிமன்றங்கள் ஒருமனதாக கருத்து தெரிவித்துள்ளன. ஒரு பெண் முக்காடு அணிவது இஸ்லாமிய நம்பிக்கையின் ஒரு முக்கிய அங்கம் அல்ல.
அது இல்லாத பட்சத்திலும், அப்பெண்களின் மத நம்பிக்கை பாதிக்கப்படாது. தலையில் முக்காடு அணிவது ஒரு அத்தியாவசியமான மதப் பழக்கம் என்று ரிட் மனுவில் கூறப்பட்டிருப்பது ஒரு அப்பட்டமான வலியுறுத்தல் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு பள்ளியின் சீருடைக் குறியீடு நியாயமானதாகவும், பாரபட்சமற்றதாகவும், சமத்துவத்தைப் பேணுவதற்கு அந்த கல்வி நிறுவனம் அதன் உள் ஒழுக்கம் மற்றும் ஆடைக் குறியீட்டைச் செயல்படுத்த முழு அதிகாரம் இருக்கிறது.
எந்தவொரு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனத்திற்கும் அதன் வளாகத்திற்குள் ஒரே மாதிரியான ஆடைக் குறியீட்டை அமல்படுத்த முழு உரிமை உண்டு. பரிந்துரைக்கப்பட்ட பள்ளி சீருடையை கடைபிடிப்பது கட்டாயம். இதில் தனி நபர் அடிப்படையில் முக்காடு போட அனுமதி பெற சட்டப்பூர்வ உரிமை இல்லை. சீருடை அனைத்து மாணவர்களுக்கும் சமமாக பொருந்தும் எனில், தனிப்பட்ட மாணவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சீருடையை மாற்றவோ அல்லது கைவிடவோ அனுமதிப்பது சீருடை என்ற கருத்தையே தோற்கடிக்கும்.
இது பள்ளி ஒழுக்கத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை நிறுவனத்திலிருந்து தனிப்பட்ட மாணவர்களுக்கு மாற்றும்.” என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
























