நடிகர் ரஜினிகாந்த் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்றுமுன்தினம் இரவு திடீரென வருகை தந்திருக்கிறார். மைசூரில் இருந்து முதுமலை வழியாக வாடகை கார் மூலம் தனியாக ஊட்டிக்கு வருகை தந்த ரஜினிகாந்த், பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்குச் சொந்தமாக ஊட்டியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கிறார்.
ரஜினிகாந்த்தின் இந்தத் திடீர் வருகை குறித்து நீலகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலருக்கு மட்டும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் இவரைச் சந்தித்துள்ளனர். தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் ரஜினிகாந்த்தைச் சந்தித்து புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டியுள்ளனர்.

பல ஆண்டுகள் கழித்து ஊட்டிக்கு வருகைத் தந்திருக்கும் ரஜினிகாந்த் குறித்து தெரிவித்த ரசிகர் மன்ற நிர்வாகிகள், ” 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தலைவர் பட ஷூட்டிங் என்னாலே ஊட்டியில்தான் இருக்கும். அதனால் சென்னைக்கு அடுத்தபடியாக தலைவரை ஊட்டியில்தான் எப்போதும் பார்க்க முடியும்.
உழைப்பாளி படம் ஷூட்டிங் முடிந்து சென்றவர், அதற்கு பிறகு ஊட்டிக்கு வரவில்லை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டிக்கு வராமல் இருந்தவர் திடீரென நேற்று முன்தினம் வந்தார். இரவு ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் நேற்று காலை மைசூர் திரும்பி விட்டார். ஜெயிலர் -2 ஷூட்டிங் நடப்பதாகத் தெரிகிறது” என்றனர்.






















