Last Updated:
நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தரம்சாலாவில் இன்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் குஜராத் அணியை ரன்கள் வித்தியாசத்தில் வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்யக் களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரைக் குவித்து, குஜராத் அணிக்குக் கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளது.
பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் புகுந்தனர். வெங்கடேஷ் ஐயர் 19 ரன்களில் காகிசோ ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்தினர். விராட் கோலி 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 43 ரன்களும், தேவ்தத் படிக்கல் 19 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பவர்பிளேயான முதல் 6 ஓவர்களில் பெங்களூரு அணி 76 ரன்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் ரஜத் படிதார் மற்றும் குருணால் பாண்டியா அதிரடியின் உச்சத்திற்குச் சென்றனர். குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது. குருணால் பாண்டியா 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்ற கேப்டன் ரஜத் படிதார், மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிக்ஸர் மழை பொழிந்து வெறும் 33 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதி ஓவர்களில் டிம் டேவிட் 4 ரன்களில் ஆட்டமிழக்க, ஜித்தேஷ் சர்மா 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்.
இதையடுத்து 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். தொடக்க வீரர்கள் சாய் சுதர்சன் 14 ரன்களிலும், சுப்மன் கில் 2 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
சிறிது நேரம் அதிரடியாக ரன்கள் சேர்த்த ஜாஸ் பட்லர் 11 பந்துகளில் 2 சிக்சர் 4 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். நிஷாந்த் சிந்து 5 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஜேசன் ஹோல்டல் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் ராகல் தெவாட்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 68 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 162 ரன்கள் எடுத்து 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2 ஆவது முறையாக நடப்பு சாம்பியனான ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் தோல்வியடையும் அணி வெளியேறும். வெற்றிபெறும் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதும்.
May 26, 2026 11:57 PM IST























