<p>இன்னும் 2 மாதங்களில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக, மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இச்சூழலில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.</p>
<h2><strong>ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா?</strong></h2>
<p>ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்தது. இது தொடர்பாக, பொது மக்கள், அரசியல் கட்சிகள், சட்ட ஆணையத்தின் கருத்துகளை கேட்டு வருகிறது அந்த உயர் மட்ட குழு.</p>
<p>ஆனால், இந்த திட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனநாயகத்துக்கு பாதகமான விளைவிகளை ஏற்படுத்தும் என்றும் அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் தேவையில்லாத செலவுகள் ஏற்படும் என்றும் கூறி வருகின்றன.</p>
<p>இந்த நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என இந்திய தேர்தல் ஆணையம் கணித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு அளித்துள்ள கடிதத்தில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஆயுள் என்பது 15 ஆண்டுகள் ஆகும்.&nbsp;</p>
<h2><strong>தேர்தல் ஆணையம் போட்ட கணக்கு:</strong></h2>
<p>ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், புதிய இயந்திரங்களை பயன்படுத்தி மூன்று முறை தேர்தலை நடத்தலாம். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா முழுவதும் மொத்தம் 11.80 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.</p>
<p>ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்போது, ​​ஒரு வாக்குச் சாவடிக்கு இரண்டு செட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும்.<br />ஒன்று மக்களவைத் தொகுதிக்கும் மற்றொன்று சட்டமன்றத் தொகுதிக்கும் தேவைப்படும்.&nbsp;</p>
<p>வாக்குப்பதிவு நடக்கும் நாள் உட்பட பல்வேறு நிலைகளில் இயந்திரங்களில் குறைபாடு ஏற்படும் பட்சத்தில், அதற்கு மாற்றாக கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (CUs), வாக்குப்பதிவு இயந்திரங்கள் (BUs), விவிபேட் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு இயந்திரம் (VVPAT) தேவைப்படுகின்றன.</p>
<p>பல்வேறு அம்சங்களை கருத்தில் எடுத்து கொண்டால், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு குறைந்தபட்ச 46,75,100 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 33,63,300 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் 36,62,600 விவிபேட் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு இயந்திரங்களும் தேவைப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports