<section class="styles-m__story-card__3w7kc null story-card">
<div class="story-element story-element-text">
<div>
<p>கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணன். கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகரான இவருக்கு அன்பரசி என்ற மனைவியும் கிஷோர் (வயது 10) மற்றும் சக்திதரன் (வயது 8) என்ற மகன்கள் உள்ளனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. கோபி கிருஷ்ணன் கிரிக்கெட் பிளேயர் தோனியின் தீவிர ரசிகர் என்பதால் சி.எஸ்.கே அணியின் வண்ணத்தில் வீட்டின் கலரை மஞ்சள் நிறத்தில் மாற்றினார். குறிப்பாக வீடு முழுவதும் தோனியின் படங்களை வரைந்து வைத்துள்ளதால் தோனியின் ரசிகர்கள் பலர் இவரது வீட்டை தேடி வந்து பார்த்து செல்வதை இன்றுவரை வழக்கமாக கொண்டுள்ளனர். தோனியின் மீது தீவிர பற்று கொண்டிருந்த கோபி கிருஷ்ணன் இன்று அதாவது ஜனவரி 18ஆம் தேதி அதிகாலை வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். </p>
<p>இதனைப் பார்த்த குடும்பத்தார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சமபவ இடத்திற்கு வந்த ராமநத்தம் காவல் நிலைய காவலர்கள் சடலமாக இருந்த கோபி கிருஷ்ணனின் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது கொலையா தற்கொலையா என விசாரணை நடத்தியும் வருகின்றனர். விசாரணையில் கோபி கிருஷ்ணனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இதனால் முன்விரோதமும் இருந்துள்ளது. நேற்று இரவு கிராமத்தில் <a title="பொங்கல்" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல்</a> விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் தாகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபிகிருஷ்ணனை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது . இந்த நிலையில் கோபி கிருஷ்ணன் அதிகாலையில் வீட்டில் மின் விசிறியில் சடலமாக தொங்கி உள்ளார். இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் கோபி கிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். </p>
</div>
</div>
</section>
<div class="vikatan-top-ad-width ad">
<div class="ad-container vikatan-top-ad">
<div class="desktop ad_300_250">
<div class="">
<div data-google-query-id="CJbl-JO45oMDFbRbnQkda6gG-g"> </div>
<div data-google-query-id="CJbl-JO45oMDFbRbnQkda6gG-g">தோனியின் தீவிர ரசிகரான கோபி கிருஷ்ணனின் மரணம் அப்பகுதியில் மட்டும் இல்லாமல் இணையத்திலும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகியுள்ளது. கொரோனா காலகட்டத்திற்கு முன்னர் வரை துபாயில் பணியாற்றி வந்த கோபி கிருஷ்ணன் அதன் பின்னர் சொந்த ஊரிலேயே இருந்து வருகின்றார். இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் மீதான அன்பினால் வீடு முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிறத்தில் பெயிண்டிங் செய்தது மட்டும் இல்லாமல், வீட்டுச் சுவர்களில் தோனியின் உருவப்படத்தை வரைந்துள்ளார். மேலும் தனது வீட்டிற்கு ஹோம் ஆஃப் தோனி ஃபேன் என பெயரிட்டுள்ளார். அதாவது தோனி ரசிகரின் வீடு என பெயரிட்டுள்ளார். </div>
<div data-google-query-id="CJbl-JO45oMDFbRbnQkda6gG-g"> </div>
<div data-google-query-id="CJbl-JO45oMDFbRbnQkda6gG-g">கோபி கிருஷ்ணா தனது வீட்டிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி நிறத்தில் பெயிண்ட் செய்ததை தான் இன்ஸ்டாகிராமில் பார்த்ததாக தோனி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.இந்த வீட்டின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்தேன். இந்த அன்பு எனக்கானது மட்டுமல்ல. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதும் , என் மீதும் உள்ள அன்பை வெளிப்படுத்தும் செயல். இது சாதாரண விஷயம் இல்லை. இதுபோன்று நீங்கள் எடுக்கும் முடிவுக்கு மொத்த குடும்பமும் ஒத்துழைக்க வேண்டும். இது எப்போதும் நீடித்து நிலைக்கக் கூடியது. சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டுவிட்டு, உடனே மாற்றிவிடுவது போல கிடையாது. எனவே ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் என்னுடைய நன்றிகள் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </div>
<div data-google-query-id="CJbl-JO45oMDFbRbnQkda6gG-g">
<p><strong>தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.</strong></p>
<p><br /><strong>சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,</strong><br /><strong>எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,</strong><br /><strong>சென்னை – 600 028.</strong><br /><strong>தொலைபேசி எண் – +91 44 2464 0050, +91 44 2464 0060</strong></p>
</div>
</div>
</div>
</div>
</div>