CM Stalin Slams BJP: இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இருந்து பாசிச பாஜவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என, முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
கேரள முதலமைச்சர் போராட்டம்:
டெல்லி ஐந்தர்மந்தரில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டியும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் உரை:
முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், “கேரளத்தில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய உங்களை டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்த வைத்த மிக மோசமான அரசியல் சூழலை நினைத்து வருத்தப்படுறேன். அண்மையில் தான் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்தினார். தற்போது திமுகவைச் சேர்ந்த எம்பிக்களாலும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. நிதி பகிர்வில் தங்களின் மாநிலத்திற்கு பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிராக எல்லா மாநிலங்களும் போராட்டம் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. இதற்கு காரணமான ஒன்றிய பாஜ அரசு மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை.
முதலமைச்சர்களை விரும்பாத பிரதமர் மோடி – ஸ்டாலின்
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதியிடம் ஒரு கருத்தை சொன்னார். “தமிழ்நாட்டின் கோரிக்கைக்காக நீங்கள் ஒரு முறை கூட டெல்லிக்கு வரத் தேவையில்லை. அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்க மாட்டேன், தமிழ்நாட்டில் இருந்தபடியே சொன்னால் போதும், நிறைவேற்றி தருவேன்” என்றார். மாநிலங்களையும், மாநில மக்களையும் மதிக்கின்றவர்களாக முந்தைய பிரதமர்கள் இருந்தார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி – மாநிலங்களை முனிசிபாலிட்டிகளை போல நினைக்கிறார். மாநிலங்கள் இருப்பதோ – மாநிலங்களுக்கு முதலமைச்சர்கள் இருப்பதோ அவருக்கு பிடிக்கவில்லை.
இத்தனைக்கும் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்து, அதன்பிறகு பிரதமர் ஆனவர். ஆனால், பிரதமர் ஆனதும் அவர் செய்த முதல் செயல், மாநிலங்களின் உரிமையை பறித்ததுதான். மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்கு சமம். அதைத்தான் பாஜ அரசு செய்து வருகிறது. இது ஏதோ எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நடக்கிறது என்று பாஜக முதலமைச்சர்கள் நினைக்க வேண்டாம். நாளை உங்கள் மாநிலங்களுக்கும் இதே கதிதான் என்று எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்.
வளர்ச்சிக்கு தடை:
பாஜக அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உறுதியோடு போராடி வருகிறது. அதே பாணியில், கேரள முதலமைச்சர் காம்ரேட் பினராயி விஜயனும் போராடி வருகிறார். ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பிறகு மாபெரும் நிதி நெருக்கடி பேரிடரை எல்லா மாநில அரசுகளும் சந்திக்கிறோம். அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிணைத்து ஆளக்கூடிய ஒன்றிய அரசு, இந்த நிதி நெருக்கடியை நீக்குகிற வகையில் செயல்பட வேண்டும். ஆனால் அப்படி செயல்படவில்லை. மாநிலங்கள் வளர்ச்சி பணிகளுக்காக கடன் வாங்குவதற்கு கூட தடையை ஏற்படுத்துகிறார்கள்.
மாநிலங்களுடைய பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது. மக்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்வது மாநில அரசுகள்தான். மாநில அரசிடம் தான் எல்லா அன்றாட தேவைகளையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கு பாஜக அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இதை எல்லாரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தாக வேண்டும்.
I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் நம்முடைய ஒற்றுமையின் மூலமாக, இந்திய அரசை கைப்பற்றி, பாசிச பாஜவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அனைத்து மாநிலங்களையும் மதிக்கும் – சமமாக நடத்தும் கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம். காம்ரேட் பினராயி விஜயனுக்கும், கேரள அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேறும்” என முதலமைச்சர் பேசினார்.ம்ப்

மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports