Last Updated:
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆர்சிபி அணியில் கோலி 75 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி நடப்பு சாம்பியனான ஆர்சிபி தொடர்ந்து 2 ஆவது முறையாக கோப்பையை வென்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 155 ரன்கள் எடுத்திருந்த நிலையில், விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஆர்சிபி அணி 161 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் சுப்மன் கில் 10 ரன்களிலும், சாய் சுதர்சன் 12 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அடுத்தடுத்து வந்த நிஷாந்த் சிந்து ரன்களும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 19 ரன்களும் எடுத்து நிதானமாக ஆட முயன்றபோதிலும், பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் ரன் வேகத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தினர்.
அப்போது களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். பொறுப்புடன் ஆடிய அவர் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருக்கு ஒத்துழைப்பு தந்த அர்ஷத் கான் 15 ரன்களும், ராகுல் திவேதியா மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா 7 ரன்களும் எடுத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.
தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அணிக்கு கொடுத்தார். தேவ்தத் படிக்கல், குருனல் பாண்ட்யா ஆகியோர் தலா 1 ரன் எடுத்து வெளியேறினர்.
டிம் டேவிட் 24 ரன்கள் எடுத்தார். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 42 பந்துகளில் 3 சிக்சர் 9 பவுண்டரியுடன் 75 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி அணி 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணி தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
May 31, 2026 11:30 PM IST























