தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பின்பு, மூன்று முக்கிய அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார்.

தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (10.5.2026), சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு முதலமைச்சராக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மூன்று முக்கிய அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார்.

அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:

1. இலவச மின்சாரம் திட்டம்
இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோருக்கு, இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.

2. “சிங்கப் பெண்” சிறப்பு அதிரடிப் படை
பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தவும், போதுமான ஆளிநர்கள் / பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய “சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை” மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும்.

இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

3. போதைப் பொருட்கள் தடுப்புப் படை
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 காவல் நிலையங்களும், 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களுக்கு தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்களும் அமைக்கப்படும்.

இதன் மூலம் மொத்தம் 65 போதைப் பொருட்கள் தடுப்புப் படை (Anti-Narcotic Task Force) காவல் நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports