கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் எருமப்பெட்டியைச் சேர்ந்தவர் கே.ஜெயஸ்மிதா. திருவனந்தபுரத்தில் தனியாக வசித்து வந்த இவர், அரசுத் துறையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
2023 ஜூலை 30 அன்று இரவு, இவர் வடக்காஞ்சேரியிலிருந்து திருவனந்தபுரம் செல்வதற்காக ரயில்வே கவுன்ட்டரில் படிவம் பூர்த்தி செய்து படுக்கை வசதி கொண்ட டிக்கெட் பெற்றிருந்தார். அவருக்கு எஸ்-4 பெட்டியில் 41-ம் எண் படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.
ரயிலில் ஏறி தனது படுக்கைக்குச் சென்ற ஜெயஸ்மிதாவுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஏற்கனவே மற்றொரு பயணி அமர்ந்திருந்தார்.
இது குறித்து பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டபோது, “இந்த டிக்கெட் ஆன்லைனில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீங்கள் டிக்கெட் இல்லாமல் பயணிக்கிறீர்கள். 500 ரூபாய் அபராதம் செலுத்தினால் மாற்று இடம் தருகிறோம். இல்லை என்றால் அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிடுங்கள்” என்று கூறியுள்ளார்.
தான் டிக்கெட்டை ரத்து செய்யவே இல்லை என்றும், நள்ளிரவு நேரம் என்பதால் தன்னை நடுவழியில் இறக்கிவிட வேண்டாம் என்றும் அந்தப் பெண் எவ்வளவு சொல்லியும் பரிசோதகர் கேட்கவில்லை. டிக்கெட் ஆன்லைன் மூலம் ரத்துச் செய்யப்பட்டதாக டிக்கெட் பரிசோதகர் கூறியுள்ளார். ஆனால், கவுண்டரில் எடுத்த டிக்கெட்டை ஆன்லைனில் எப்படி ரத்து செய்யமுடியும் என அந்த பெண் கேட்டும் டிக்கெட் பரிசோதகரால் பதில் சொல்ல இயலவில்லை. ரயில் ஆலுவா நிலையத்தை அடைந்ததும் ஜெயஸ்மிதாவை வலுக்கட்டாயமாகக் கீழே இறக்கி ரயில்வே பாதுகாப்புப் படையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஜெயஸ்மிதா மீது குற்ற வழக்குப் பதிவு செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
ரயில்வே பதிவு செய்த கிரிமினல் வழக்கின் காரணமாக, ஜெயஸ்மிதா அரசுத் துறையில் பார்த்து வந்த ஒப்பந்த வேலையை உடனடியாக இழந்தார். கடுமையான மன உளைச்சலுக்கும் அவமானத்திற்கும் ஆளான அவர், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிட்டார்.
இதனைத் தொடர்ந்து வணிக மேலாளர் நடத்திய விரிவான விசாரணையில் டிக்கெட் கவுன்ட்டரில் ஜெயஸ்மிதா எழுதிக் கொடுத்த விண்ணப்பப் படிவத்தில் இருந்த செல்போன் எண்ணில், ஒரேயொரு இலக்கத்தைக் கணினியில் பதிவு செய்த ஊழியர் தவறாகப் பதிவிட்டுள்ளார்.
இதனால் முன்பதிவு தகவல் வேறு ஒரு நபரின் செல்போனுக்குச் சென்றுள்ளது. தனக்கு சம்பந்தமில்லாத மெசேஜ் வந்ததைக் கண்ட அந்த நபர், டிக்கெட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த தவறுகளுக்கு ரயில்வே ஊழியர்களின் கவனக்குறைவும், மனிதாபிமானமற்ற செயலும்தான் காரணம் என்றும்… இதுவே பெண்ணின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டதும் தெரியவந்தது.

இந்த வழக்கை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி அலெக்சாண்டர் தாமஸ், “தனியாகப் பயணித்த ஒரு பெண்ணிடம் ரயில்வே நிர்வாகம் காட்டியது மன்னிக்க முடியாத அநீதி. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கண்ணியத்துடன் வாழும் அடிப்படை உரிமையையே ரயில்வே சீர்குலைத்துவிட்டது” என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட ஜெயஸ்மிதாவுக்கு ரயில்வே நிர்வாகம் ஒரு மாத காலத்திற்குள் ₹2 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், அந்தத் தொகையைத் தவறிழைத்த சம்பந்தப்பட்ட ஊழியர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
தவறும் பட்சத்தில் 8 சதவீத வட்டியுடன் இழப்பீட்டை வழங்க நேரிடும் எனவும், இரவில் தனியாகப் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார். மேலும், இந்த வழக்கினால் பறிபோன அரசு வேலையை மீண்டும் பெறுவதற்கு ஜெயஸ்மிதா அரசுக்கு மேல்முறையீடு செய்யலாம் என்றும் ஆணையம் வழிகாட்டியுள்ளது.
























