"செங்கோட்டையன் பேசுறது சரியா..." - ஆளுநரிடம் கொதித்த டி.டி.வி.தினகரன்!


சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ரணகளக் காட்சிகளுடன் நடந்து வரும் நிலையில், திடீர் அரசியல் திருப்பமாக தமிழ்நாடு ஆளுநர் அர்லேக்கரைச் சந்தித்திருக்கிறார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நீடித்த அந்தச் சந்திப்பில், குதிரை பேர குற்றச்சாட்டு குறித்து அளிக்கப்பட்ட தன்னுடைய புகார் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார் தினகரன்.

டி.டி.வி.தினகரன்

அதுகுறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க-வின் இரண்டாம்கட்ட தலைவர்கள் சிலர், “சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றிப்பெற்ற த.வெ.க., ஆட்சியமைக்க போதுமான 118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இல்லாமல் தடுமாறியது. பெரம்பூரிலும் திருச்சி கிழக்கிலும் வெற்றிப்பெற்ற த.வெ.க தலைவர் விஜய், திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்தார். ஆகவே, 107 எம்.எல்.ஏ-க்கள் பலம்தான் அந்தக் கட்சிக்கு மொத்தமாகவே இருந்தது. ஆட்சியைப் பிடிக்க மேலும் 11 எம்.எல்.ஏ-க்கள் தேவைப்பட்ட நிலையில், கூட்டணிக்காக ஆளாய் பறந்தனர். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களிடமும் ஆதரவு கோரினர்.

அப்படி, அ.ம.மு.க சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற எஸ்.காமராஜிடம் ஆதரவு கேட்டது த.வெ.க. ஆனால், அ.தி.மு.க கூட்டணியில் அ.ம.மு.க இருந்ததால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கடிதம் கொடுத்துவிட்டார் எஸ்.காமராஜ். அந்தச்சூழலில், த.வெ.க-வுக்கு ஆதரவளிப்பதாக எஸ்.காமராஜ் பெயரில் ஒரு கடிதம் ஆளுநர் மாளிகைக்குச் சென்றது. இந்த விவரம் தெரிந்தவுடன் நேராக ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டு வந்த டி.டி.வி.தினகரன், ஆளுநர் முன்பாக எஸ்.காமராஜை ஆஜர்படுத்தி, தன்னுடைய கட்சியின் எம்.எல்.ஏ பெயரில் மோசடி நடப்பதாக புகாரளித்தார்.

காமராஜ் எம்.எல்.ஏ உடன் டிடிவி தினகரன்

‘ஆட்சியைப் பிடிப்பதற்காக த.வெ.க குதிரை பேரம் நடத்துகிறது. இவர்கள் தூய சக்தியா…’ என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார். அதோடு நிற்காமல், தன் கட்சி எம்.எல்.ஏ பெயரில் போலியான ஆதரவு கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அளித்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, கிண்டி காவல் நிலையத்திலும் புகாரளித்தார் டி.டி.வி.தினகரன். அந்தப் புகார் அளிக்கப்பட்டு நூறு நாள்களைக் கடந்துவிட்ட நிலையில், எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சி.எஸ்.ஆர் மட்டுமே போடப்பட்டுள்ளது. ஆளுநரிடம் அளிக்கப்பட்ட புகாரிலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்தச் சூழலில்தான், த.வெ.க அரசின் நூறு நாள் சாதனை விளக்கக்கூட்டம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் சமீபத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘அ.தி.மு.க-வில் தற்போது 47 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அதில் பத்து எம்.எல்.ஏ-க்கள் எங்கள் த.வெ.க கட்சியில் இணையவுள்ளனர். மீதமிருப்பவர்களும் அடுத்த ஆறு மாதங்களில் வந்துவிடுவார்கள். அ.தி.மு.க பொதுச்செயலாளர் பொறுப்பில் எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அந்தக் கட்சி வெற்றிப்பெறாது’ என்று பேசியிருந்தார். அதுதான் டி.டி.வி.தினகரனை உஷ்ணப்படுத்திவிட்டது.

செங்கோட்டையன்

செங்கோட்டையனின் பேச்சை ஆளுநருக்குப் போட்டுக் காட்டிய தினகரன், அதனை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து விவரித்தார். ‘எதிர்க்கட்சியில் இருந்து பத்து எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-வுக்கு வந்துவிடுவார்கள் என்று ஒரு சீனியர் அமைச்சர் சொல்கிறார். ஒரு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர்கள், ஏதோவொரு ஆசைக்கு இரையாகி தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியில் இணைவது எப்படி சரியாகும்… செங்கோட்டையன் பேசுவது சரியா… அவரது பேச்சு குதிரை பேரத்துக்குத்தானே வழிவகுக்கிறது…’ என்று கொதித்துவிட்டார் தினகர

அமைதியாகக் கேட்டுக்கொண்ட ஆளுநர் அர்லேக்கர், தினகரனின் புகாரில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், கிண்டி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் முறையிட திட்டமிட்டிருக்கிறார் தினகரன். தேவைப்பட்டால் சி.பி.ஐ விசாரணையும் கோருவோம்.

ஆளுநரிடம் புகாரளித்த டி.டி.வி.தினகரன்

மே 8-ம் தேதி இரவு தன்னுடைய மொபைல் போன் தொலைந்து போனதாகக் கூறியிருக்கிறார் எஸ்.காமராஜ். அவரது செல்போன் எண் எங்கேயெல்லாம் இருந்தது என்பதை டவர் லொகேஷன் எடுத்தாலே பல கேள்விகளுக்கு விடை தெரிந்துவிடும். அவரோடு தொடர்பில் இருந்த ஒரு திரைப்பட இயக்குநரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார். இந்த வழக்கை முறையாக விசாரிக்க ஆளுநர் உத்தரவிட்டால், த.வெ.க-வின் அதிகார உச்சத்தில் இருப்பவர்கள் பலரும் சிக்குவார்கள்” என்றனர் விரிவாக.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 8-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு பின்னர், த.வெ.க-வில் மாற்றுக்கட்சியினர் இணையும் படலம் மீண்டும் தொடங்குமென தெரிகிறது. அப்போது, ‘அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிட்டிங் எம்.எல்.ஏ-க்களும் கட்சியில் இணைவார்கள்’ என்பதைத்தான் பொதுக்கூட்டத்தில் போட்டுடைத்திருக்கிறார் அமைச்சர் செங்கோட்டையன். அதற்கு ‘செக்’ வைப்பதுபோல ஆளுநரிடம் புகாரளித்திருக்கிறார் தினகரன். இனி முடிவெடுக்க வேண்டியது ஆளுநர்தான். என்ன செய்யப் போகிறாரென பார்ப்போம்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed