சட்டமன்றத்தில் முதல்வரின் கையில் இருக்கும் காவல்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘ஆளுங்கட்சியினர் தினம் தினம் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் ஒரு எம்.எல்.ஏ பெயரை சொல்லி பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். அதில் புகார் கொடுத்து எந்த நடவடிக்கையும் இல்லை.
காவல்துறை மீதான விவாதத்தில் நான் உரையாற்றுகிறேன். அந்தத் துறை அமைச்சரான முதல்வர் பதில் சொல்லாமல், நீர்வளத்துறை அமைச்சர் பதில் சொல்கிறாரே?
தூத்துக்குடி, ஆலந்தூர், ராணிப்பேட்டை, ஆர்.கே.நகர், சேலம் தவெக நிர்வாகிகளின் மீதும் பாலியல் புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றின் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆட்சிக்கு வருவதற்கு முன் முதல்வர் விஜய் காவல் மரணங்களுக்கு எதிராக பேசினார். ஸாரி வேண்டாம்…நீதி வேண்டும் என்றார். ஆனால், இந்த அரசு அமைந்த பிறகு 8 காவல் மரணங்கள் நடந்திருக்கிறது. குறைந்தபட்சமாக முதல்வர் ஸாரி கூட கேட்கவில்லை.
காவல்துறையும் உளவுத்துறையும் செயலிழந்துவிட்டதோ எனும் சந்தேகம் எழுகிறது. ஜென் ஸி இளைஞர்களையும் அவர்களுக்கு சாதகமான கட்சியினரையும் பத்திரிகையாளர்களையும் இந்த அரசு கைது செய்கிறது.

முதல்வரை வெளிப்படையாக விமர்சிக்கும் பாஜக தலைவர்கள் மீது எந்தப் புகாரும் பதியப்படுவதில்லை. எங்களுக்கு வந்தா ரத்தம் அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? பாஜக அடித்தால் வலித்தாலும் வெளியே சொல்லக்கூடாது என்கிற யுக்தியை ஆளுங்கட்சி பயன்படுத்துகிறது
நீட் தேர்வுக்கு எதிராக மெரினாவில் போராட தமிழக அரசு அனுமதிக்கவில்லை. உலகத்திலேயே மாணவர்களுக்கு பயந்து கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு இந்த அரசுதான். பெசண்ட் நகர் கடற்கரையில் அனிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கவில்லை.
உயர்கல்வி சார்பாக இடதுசாரி அமைப்புகள் நடத்தும் போராட்டத்துக்கு மாணவர்களை அனுமதிக்கக் கூடாது என சுற்றறிக்கை கொடுக்கப்படுகிறது.
இதெல்லாம் முதல்வருக்கு தெரிந்துதான் நடக்கிறதா?
எந்த கேள்வி கேட்டாலும் சம்பந்தப்பட்ட அமைச்சர் பேசாமல் இன்னொரு அமைச்சர் பதில் சொல்கிறார். டிவி சீரியலில் வருவது போல ‘இவருக்கு பதில் இவர்’ பாணியில் பதில் சொல்கிறார்கள்.
முதல்வரின் பதிலுரைக்கு இன்னும் 3 நாட்கள் நேரமிருக்கிறது. அவர் நன்றாக முன் தயாரிப்பு செய்து வரட்டும்.
எங்கள் மீது பழி போடாமல் கேட்கிற கேள்விகளுக்கு உரிய பதில் சொல்லுங்கள். இன்னும் திமுகதான் ஆட்சி செய்கிறது என்ற எண்ணத்தை நீக்கிவிடுங்கள்.
ரோல் கேமரா ஆக்சன் மோடில் சம்பந்தமே இல்லாமல் குட்டிக்கதைகள் சொல்லாமல் மக்களுடைய கேள்விகளுக்கு முதல்வர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்.’ என்றார்.
























