<p><strong>Thirukovilur Constituency:</strong> திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.</p>
<h2><strong>திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு:</strong></h2>
<p>நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேதி, அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படும் என மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு தேசிய கட்சிகள் தொடங்கி, மாநில கட்சிகள் வரை அனைத்துமே தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. சில கட்சிகள் வேட்பாளர்களை கூட அறிவிக்க தொடங்கிவிட்டன.</p>
<p>கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் அரசியல் கட்சிகள் இடையே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டை பொறுத்தவரை இத்தனை இடங்கள் தந்தால் கூட்டணி வைக்கலாம் என சில கட்சிகள் வெளிப்படையாகவே தெரிவித்து விட்டது. இந்த நிலையில், திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.</p>
<p>திருக்கோவிலூர் சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வான பொன்முடிக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது. இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அமைச்சர், எம்.எல்.ஏ பதவிகளை பொன்முடி இழந்தார். பொன்முடியின் எம்.எல்.ஏ பதவி தகுதி இழப்பு அறிவிக்கப்பட்டதும், அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியாகியது. </p>
<h2><strong>தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகள்:</strong></h2>
<p>இதனால், திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவைச் செயலாளர் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரிந்தரையை ஏற்று தேர்தல் ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிடும். நாடாளுமன்ற தேர்தல் சில வாரங்களில் நடக்கும் நிலையில், அத்துடன் திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. </p>
<p>இதேபோல, விளவங்கோடு தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்காக மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி, கடந்த மாதம் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று பா.ஜ.க.வில் இணைந்தார்.</p>
<p>காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்ததையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியும் அவரை அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியது.</p>
<p>இதையடுத்து, விளவங்கோடு தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியிருக்கிறார். பொதுவாக ஒரு மக்களவைத் தொகுதியோ, சட்டமன்ற தொகுதியோ காலியானால் அந்த தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. </p>
<p>தற்போது விளவங்கோடு மற்றும் திருக்கோவிலூர் தொகுதிகள் காலியாகி இருப்பதால், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது, விளவங்கோடு இடைத்தேர்தலுக்குமான தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<hr />
<p>மேலும் படிக்க</p>
<p class="abp-article-title"><a title="TN 12th Exam: நடந்து முடிந்த ஆங்கிலத் தேர்வு: 12,696 மாணவர்கள் ஆப்சென்ட்- 3 பேர் முறைகேடு!" href="https://tamil.abplive.com/education/tamil-nadu-12th-exam-2024-english-exam-12696-students-absent-3-students-involved-in-malpractice-171093" target="_self">TN 12th Exam: நடந்து முடிந்த ஆங்கிலத் தேர்வு: 12,696 மாணவர்கள் ஆப்சென்ட்- 3 பேர் முறைகேடு!</a></p>

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports






















So, It gave me some useful insights. glad I found this honestly.