தமிழ்த் திரைப்படத் துறையில் முக்கியமான மாற்றங்களை வலியுறுத்தி, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்தியது.
கடந்த மாதம் நடைபெற்ற சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடுத்தர மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள், நிலையான சம்பளத்திற்கு பதிலாக வருவாய் பகிர்வு (Revenue Sharing) முறையில் சம்பளம் பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு கவன ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக, மாநிலம் முழுவதும் மற்றும் வெளியூர் லொக்கேஷன்களிலும் நடைபெற்ற 30-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட படங்களில், சூர்யா, சிம்பு, விஜய் சேதுபதி, விஷால், விஜய் ஆண்டனி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களும் அடங்குகின்றன.
ஒரே நாளில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால், தயாரிப்பாளர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், திரைப்படத் தொழிலாளர்கள் அமைப்பான பெப்சி உட்பட்ட சுமார் 7,000 தொழிலாளர்கள் அந்த நாளில் வேலை இழந்து பாதிக்கப்பட்டனர்.
இந்த வேலைநிறுத்தம் மூலம் தயாரிப்பாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து துறை முழுவதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.



























