தேவதாஸ் – பார்வதி – சந்திரா என ‘தேவதாஸ்’ நாவலின் கிளாசிக் பாத்திரங்களைத் தன் உலகில் உலாவவிட்டிருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். குற்றம் செய்த போலீஸைத் தட்டிக் கேட்கும் கேங்ஸ்டர் குழு, அதனால் இந்தக் குழுவைத் துரத்தத் தொடங்கும் காவல் அதிகாரிகள் என்கிற மெல்லிய, பழக்கப்பட்ட கதையை விறுவிறுப்பான திரைக்கதையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் தொடக்கத்திலேயே தீவிரமாகக் கதைக்குள் செல்லும் படம், சின்ன சின்ன வசனங்கள் மூலம் கதாபாத்திரங்களின் பின்னணி, அவர்களின் மனவோட்டம், குழுவினருக்குள்ளேயே இருக்கும் மோதல் போன்றவற்றைக் காட்டிவிடுகின்றன. இதற்குப் பின் கதை ‘டாம் & ஜெர்ரி’ சேஸிங்கிற்குச் செல்கிறது.

இதில் விறுவிறுப்பு கியரை எங்கும் தவறவிட்டுவிடாமல் இறுக்கமாகத் திரைக்கதையை நகர்த்திச் செல்கிறார்கள் திரைக்கதையாசிரியர்கள் அருண் மாதேஷ்வரன் மற்றும் அருண் ரஞ்சன். இதன் பிறகு தீவிர ஆக்ஷன் படமாக அவதாரமெடுக்கும் படம், இடையிடையே கொஞ்சம் தேவையான நிதானத்தையும் எடுத்துக்கொள்கிறது. சந்திராவின் பின்னணி, அவரின் எண்ணவோட்டம், அவர் அடக்கி வைத்திருக்கும் மலையளவு கோபம், சந்திராவிடம் தேவதாஸுக்கு வரும் கனெக்ட் போன்றவை அடர்த்தியான காட்சிகளாக உருவம் பெற்றிருக்கின்றன.
























