இயக்குநர் இமயம் பாரதிராஜா இந்த மண்ணை விட்டுப் பிரிந்து விட்டார். தமிழ்த் திரையுலகம் கண்ணீரில் தத்தளித்தபடி, அந்தக் கிராமத்து நாயகனுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது.
தமிழ் சினிமாவின் இரு துருவங்களான ரஜினி – கமல் ஆகியோரை வைத்து பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில், ரஜினி கமல் இருவரையும் விட அதிகளவில் ரசிகர்களைக் கவர்ந்தவர் கிராமத்து வெர்ட்னரி டாக்டராக வந்த சத்யஜித். ‘நான் லைக் பண்ணினது உன்ன இல்ல, உன் 16 வயசை’ என ஸ்ரீதேவியிடம் அவர் பேசிய பஞ்ச், அந்தக் காலத்து வைரல் கன்டென்ட்.
தற்சமயம் பெங்களூருவில் வசித்து வரும் சத்யஜித், பாரதிராஜா குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
’’சென்னையில் ஃபிலிம் டெக்னாலஜி படிச்சு முடிச்சு கோல்டு மெடல் வாங்கினேன். அது பேப்பர்ல வந்தது. அம்மன் கிரியேஷன் ஆபீஸ்ல அதை பார்த்துட்டு போட்டோகிராபர் லட்சுமிகாந்தன் மூலமா என்னை கூப்பிட்டாங்க. அவரு எனக்கு ஏற்கெனவே பழக்கம்.
அவர்தான் என்னை ஆடிஷன்னு சொல்லிக் கூட்டிட்டுப் போனார், அந்த வெர்ட்னரி டாக்டர் கேரக்டருக்கு அதுக்கு முன்னாடியே சில ஆர்ட்டிஸ்ட்களைப் பார்த்து யாரும் செட் ஆகாம இருந்திருக்கு.
நான் கொஞ்சம் டிப் டாப்பா பெல்ஸ் பேன்ட் சகிதாமா அவர் முன்னாடி போய் நின்னதும், அவருக்கு சந்தோஷம் தாளலை.
என் முன்னாடியே ‘எங்கய்யா புடிச்சீங்க இவனை, இவனை மாதிரி ஒருத்தனைதான் தேடிட்டிருந்தேன்’னு ரொம்ப உற்சாகமாகிட்டார், அடுத்த நாளே ஷூட்டிங் கிளம்பிட்டோம். அதாவது எனக்கு நடிக்க வருமானெல்லாம் டெஸ்ட் பண்ணல. கல்லைக் கூட நடிக்க வச்சிடுவார்னு அவரைப் பத்திச் சொல்வாங்க இல்லையா அதேதான். தான் கற்பனை செஞ்சு வச்சிருந்த படியே ஒரு ஆர்ட்டிஸ்ட் கிடைச்சிட்டா சக்ஸஸ்னு நம்பினார். அது நடக்கவும் செஞ்சது. சபீர்னு இருந்த என் பெயரை சத்யஜித்னு அன்னைக்கு மாத்தி வச்சது இளையராஜா.

படம் எதிர்பார்த்த மாதிரியே சூப்பர் டூப்பர் ஹிட். அதுவும் என்னுடைய கேரக்டருக்கு அவ்வளவு வரவேற்பு. கிட்டத்தட்ட 50 வருஷம் ஆகப் போகுது. இன்னைக்கு எனக்கான அடையாளம் அந்தப் படம்தான்’’ என்கிறார் சத்யஜித்.





















