குடும்பஸ்தனாக அர்ஜுன், ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பைக் குறையின்றி அள்ளித் தந்திருக்கிறார். அமைதி மோடு பொத்தானை நடிப்பில் அழுத்தியிருந்தாலும், ஆக்ஷன் களத்தில் ‘நான் ஸ்டாப்’ – ஆக வலம் வந்திருக்கிறார். கதையின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் தந்திருக்கும் வேலையை நல்லபடியாகச் செய்து முடித்திருக்கிறார். கராத்தே பயின்று ஆக்ஷன் காட்சிகளுக்கு இவர் செலுத்திய உழைப்பிற்கு க்ளாப்ஸ்! நீலவேணியாக அபிராமி, இளங்கோவாக விவேக் பிரசன்னா ஆகியோர் ஆக்ஷன், நடிப்பு என அவர்களுடைய மைதானத்தில் ஆல் ரவுண்டர்களாக ஸ்கோர் செய்கிறார்கள்.

வில்லன்களாக ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன் என மூவர் வருகிறார்கள். இதில் அர்ஜுன் சிதம்பரத்தின் இறுக்கமான நடிப்பும், பவனின் வில்லனிசமும் மட்டுமே நம் நினைவில் தங்குகின்றன. வில்லனுக்கான ‘க்ளிஷே’ மொழியில் வரும் ஜான் கொக்கன் வெறுமனே கடந்துபோயிருக்கிறார். இவர்களைத் தாண்டி திலீபன், பாலா ஹாசன், வினோத் சாகர் ஆகியோர் அவரவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ‘டியூட்டி’-யைக் குறைவின்றிப் பார்த்திருக்கிறார்கள்.






















