தமிழ் – மலையாளம் பைலிங்குவல் திரைப்படமாக, ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கிறது ‘அனந்தன் காடு’ திரைப்படம்.
இந்தப் படம் ஜூன் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடைசியாக ஆர்யா நடிப்பில் ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் வெளியாகியிருந்தது.
இதனைத் தாண்டி, சூர்யாவின் ‘கருப்பு’ படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்திலும் ஆர்யா நடித்திருந்தார்.
ஆனால், அக்காட்சிகள் படத்திற்குப் பொருந்தாததால் அவை படத்திலிருந்து நீக்கப்பட்டன.
‘அனந்தன் காடு’ படத்தின் புரொமோஷன் நிகழ்வு நேற்று கேரளாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ‘கருப்பு’ படத்தில் கேமியோ செய்தது தொடர்பாக ஆர்யா பேசியிருக்கிறார்.
அவர், “‘கருப்பு’ படத்தில் ஒரு சிறிய பகுதியில் நடித்திருந்தேன். ஆனால் ஃபைனல் எடிட்டிங் செய்யும்போது, அது சரியாகப் படத்திற்குப் பொருந்தவில்லை. அதனால்தான் அது நீக்கப்பட்டது.
ஆனால், அதை நீக்குவதற்கு முன்பே இயக்குநர் பாலாஜி எனக்குப் போன் செய்து இதைப் பற்றிப் பேசினார். ‘இதை நாம் வைக்க வேண்டாம். அடுத்த முறை வேறு வகையில் நாம் முயற்சித்துப்பார்க்கலாம்’ என்றார்.

அந்தப் படத்தில் நாங்கள் ஒரு சிறிய எக்ஸ்பெரிமெண்டல் விஷயத்தைச் செய்திருந்தோம். எனவே, ஒரு முழுப் படமாகப் பார்க்கும்போது அது அந்தளவுக்குச் சரியாக வரவில்லை என்று அவர் கூறினார்.
அதற்கு நான், ‘சரி, பரவாயில்லை. உங்களுக்கு அது வேண்டாம் என்று தோன்றினால் எனக்கொன்றும் பிரச்சினையில்லை’ என்று சொன்னேன். அவ்வளவுதான்.” எனக் கூறியிருக்கிறார்.


















