தொடர்ந்து சட்டப்பேரவையில் மேகமலை விவகாரம் தொடர்பாக பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், “உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் விரைவில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும் எனவும், மேகமலை மலைக் கிராம மக்கள் பக்கம் என்றும் தவெக அரசு இருக்கும்’ எனக் கூறினார்.
இந்நிலையில் மேகமலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு மற்றும் தமிழ்நாடு அரசு அளித்த தகவலின்படி தெரிவிக்கப்பட்டுள்ள 118 அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வனத்தை விட்டு வெளியேறாவிட்டால், சம்மந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் உத்தரவிட்டிருப்பது மலைக் கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வன விவசாயிகள் குடும்பத்தை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் 118 பேர், ராணுவம், மத்திய காவல் படை, காவல்துறை, முன்னாள் ராணுவம், வேளாண்மை, அங்கன்வாடி, சத்துணவு, கிராம நிர்வாக அலுவலர், சுகாதரத் துறை, தபால் துறை, நியாய விலைக்கடை, விடுதி காப்பாளர், மின்வாரியம், ஆசிரியர், ஊரக வளர்ச்சித்துறை, டாஸ்மாக், தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி துறை தலைமை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருப்பது மேகமலை மலைக் கிராம மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
























