“அக்கா கனிமொழி, மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பல பெண் தோழர்களுக்கு எதிராக, எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், பழைய சங்கிகளோடு சேர்த்து இப்போது தவெக ஆதரவாளர்களும் இணைந்து அசிங்கமான மற்றும் கொச்சையானப் பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றன” என்று திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி “உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும். இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலையே இதன் மூலம் வெளிப்படுகிறது.
பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
























