பிப்ரவரி மாதக் கடைசியில் தொடங்கிய ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்போ ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும்… இப்போது முடிந்துவிடும்… அப்போது முடிந்துவிடும் என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்.
நீளும் ஈரான் போர்
வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவின் மிட் டேர்ம் தேர்தல் வர உள்ளது. இது அந்த நாட்டின் காங்கிரஸின் (நாடாளுமன்றம்) தேர்தல் ஆகும்.
அதற்குள்ளாவது இந்தப் போர் முடிந்துவிடும் என்று நினைத்தால், ‘தேர்தலை முன்னிட்டெல்லாம் போர் சீக்கிரம் முடிக்கப்படாது’ என்று கூறிவிட்டார் ட்ரம்ப்.
இதனால், அமெரிக்கா தாக்க… ஈரான் பதிலுக்குத் தாக்க அல்லது ஈரான் முதலில் தாக்க… அமெரிக்கா பதிலுக்குத் தாக்க என்கிற காட்சிகள் தொடர்கதையாகிக்கொண்டே இருக்கின்றன.
ட்ரம்ப் விளக்கம்
நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார் ட்ரம்ப். அப்போது இந்தப் போர் இத்தனை நாட்கள் நீள்வது குறித்து விளக்கமளித்துள்ளார்.
“இந்தப் போரின் முதன்மையான நோக்கமே தெஹ்ரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வதைத் தடுப்பதுதான். இப்போது ஐந்து மாதங்கள் ஆகின்றன.
இந்த ஐந்து மாதங்களில் என்ன சாதித்தோம் தெரியுமா? அவர்கள் இனி அணு ஆயுதத்தைப் பெறவே முடியாது. அதைத்தான் செய்திருக்கிறோம். ஈரான் கைக்கு அணு ஆயுதம் கிடைக்கவே கிடைக்காது.
இஸ்ரேலும், மத்திய கிழக்கும்
அமெரிக்க ராணுவத்தின் தலையீடுதான் ஒரு பெரிய பிராந்தியப் போரைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுக்காமல் இருந்திருந்தால், இஸ்ரேலும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கும் மிக மோசமான அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும்.
அமெரிக்கா மட்டும் உள்ளே இறங்காமல் இருந்திருந்தால், இப்போது இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்திருக்காது. மத்திய கிழக்கே அழிந்திருக்கும்.
அதற்கு அடுத்து அவர்கள் ஐரோப்பிய நகரங்களையும், நமது நகரங்களையும் கூடத் தாக்கியிருப்பார்கள்.
ஆனால், இந்த ஐந்து மாதங்களிலேயே அவர்கள் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்திவிட்டோம்” என்று பேசியிருக்கிறார்.
























