<p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> மயிலம் அருகே பெரும்பாக்கத்தில் செயல்படும் கல்குவாரியில் வெடி வைப்பதற்காக பள்ளம் தோன்டிய போது மண் சரிவு ஏற்பட்டு இரண்டு தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>
<p style="text-align: justify;">விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகேயுள்ள பெரும்பாக்கத்தில் இரண்டு வருடங்களாக டிபிஎல் என்ற நிறுவனத்தின் கல்குவாரி &nbsp;செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் பணிபுரியும் இறையனூரை சார்ந்த அய்யனார் சேலத்தை ராஜேந்திரன் ஆகிய இருவரும் வழக்கம் போல் இன்று பணிக்கு வந்து கல் குவாரியில் பாறைகளை எடுப்பதற்காக பள்ளம் தோண்டி வெடி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருவரும் நின்றிருந்த பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண் சரிவில் வெடி வெடிப்பதற்கான டிரில் போட்டு மருந்து வைக்கும் இரு தொழிலாளர்களும் மண் சரிவில் சிக்கியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">மண் சரிவில் சிக்கி கொண்டவர்களை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு வெளியே எடுத்தபோது மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அங்கு பணிபுரிபவர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குவாரியில் பணி புரிபவர்களுக்கு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்குவதில்லை என்பதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த திண்டிவனம் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக புகார் அளியுங்கள் என கூறி கலைந்து செல்ல அறிவுறுத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.</p>
<p style="text-align: justify;">அதன் பிறகு இறந்த இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். கல்குவாரியில் வெடி வெடித்த போது மண் சரிவு ஏற்பட்டு இரு தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports