இந்தியா–இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ இடையே ஏற்பட்ட மோதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். 17-வது ஓவரின் கடைசி பந்தில் அசிதா பெர்னாண்டோ ஜெய்ஸ்வாலை ஆட்டமிழக்கச் செய்தார். இதையடுத்து பெர்னாண்டோ ஆக்ரோஷமாக ‘send-off’ கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஜெய்ஸ்வால் திரும்பிச் சென்று அவரிடம் பேசினார்.
இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், பெர்னாண்டோ தனது தலையை ஜெய்ஸ்வால் நோக்கி நகர்த்தியதாகவும், அதற்கு பதிலாக ஜெய்ஸ்வால் முன்னோக்கி சாய்ந்ததால் இருவரது தலைகளும் தொடர்பு கொண்டதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது. நிலைமை மேலும் தீவிரமடையாமல் சக வீரர்கள் தலையிட்டு இருவரையும் பிரித்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு முன்னாள் இந்திய வீரர் சேதேஷ்வர் புஜாரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். களத்தில் வீரர்கள் உணர்ச்சிவசப்படுவது இயல்புதான் என்றாலும், இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் உடல் தொடர்பு ஏற்படும் அளவுக்குச் சென்றது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சபா கரீமும் இந்தச் சம்பவத்தை விமர்சித்துள்ளார். கிரிக்கெட் என்பது உடல் மோதலை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டு அல்ல என்றும், களத்தில் ஆக்ரோஷம் இருந்தாலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஏராளமான இளம் ரசிகர்கள் வீரர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால்,பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் மற்றும் அசிதா பெர்னாண்டோ இருவருக்கும் போட்டிக் கட்டணத்தில் 25 சதவிகிதம் அபராதமும், தலா ஒரு டீமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது.
களத்தில் போட்டி மனப்பான்மையும் ஆக்ரோஷமும் இருக்கலாம். ஆனால் அது தனிப்பட்ட மோதலாக மாறக்கூடாது என்பதையே ஜெய்ஸ்வால்–அசிதா பெர்னாண்டோ மோதல் சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.
























