தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பரபரப்பாக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் திமுகவில் உள்ள அனைத்து பொறுப்புகளுக்கும் தேர்தல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
திமுக செயற்குழு கூட்டம்
மறுப்புறம் திமுக மூத்த அமைச்சர்கள் பொதுவெளியில் மக்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது மேலும் திமுகவுக்கு பின்னடைவை சந்தித்து வருகிறது.இப்படியான நிலையில் தவெகவுக்கு எதிராக திமுகவை கட்டமைக்கும் முயற்சியில் அறிவாலயம் ஈடுப்பட்டு வருகிறது.ஒரு பக்கம் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குழு தயாரித்த அறிக்கையால் மு.க.ஸ்டாலின் கடும் அப்செட்டில் இருக்கிறார்.
மறுப்புறம், நாளை திமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.இந்த நிலையில், திமுகவில் நீண்ட காலமாக இருந்த மாவட்ட செயலாளர்களை நீக்கிவிட்டு இளைஞரணியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு பொறுப்பை மாற்றி தர வேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி மற்றும் சபரீசன் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து ரகசிய அறிக்கையும் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்டச் செயலாளர் பதவிக்கு செக் வைக்கும் உதயநிதி
இந்த ஆலோசனையின் போது, அதிக சட்டமன்றத் தொகுதிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாவட்டச் செயலாளர்களிடமிருந்து தொகுதிகளைப் பிரித்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மாவட்டச் செயலாளரின் கீழ் அதிகபட்சமாக 3 தொகுதிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பதவிக்கும் தேர்தல் முறையா?
அதேவேளையில், கடந்த 5 ஆண்டுகளில் மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள், மாற்றப்பட வேண்டிய நிர்வாகிகள் மற்றும் மோசமாகச் செயல்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய விரிவான அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டு வருகிறது.மறுபுறம், திமுகவில் இனிவரும் காலங்களில் அனைத்து நிலை நிர்வாகிகளையும் தேர்தல் முறையிலேயே தேர்வு செய்ய வேண்டும் என்ற புதிய பரிந்துரையும் வழங்கப்பட்டுள்ளது.
முத்த நிர்வாகிகளை ஓரங்கட்ட திட்டம்
இந்தப் பரிந்துரைக்குக் கட்சித் தலைமையும் மூத்த நிர்வாகிகளும் தங்களின் சம்மதத்தைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.மேலும், சிறப்பாகச் செயல்படாத மாவட்டச் செயலாளர்களைப் பொறுப்பிலிருந்து விடுவிப்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 70 வயதைக் கடந்த மூத்த மாவட்டச் செயலாளர்களை மண்டல அளவிலான பொறுப்புகளுக்கு மாற்றவும், துணைப் பொதுச்செயலாளர் பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் இந்த உட்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

























