<p>சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு நீண்ட நாட்கள் கோரிக்கைக்குப் பின் ஒதுக்கப்பட்டுள்ளது. </p>
<p>தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று முன்தினம் (பிப்ரவரி 12) ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தற்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்று வரும் அதே நேரத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சினைகளையும், மக்களின் பொதுப்பிரச்சினைகளையும் எழுப்பி வருகின்றனர். இதற்கு முதலமைச்சர் முதல் அந்தந்த துறை அமைச்சர்கள் வரை பதிலளித்து வருகின்றனர். </p>
<p>நேற்று கூட்டத்தொடரின் கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, ‘சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கை அருகில் தான் துணைத்தலைவர் அமர்வது மரபாக உள்ளது. அப்படி இருக்கையில் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.,க்களால் தேர்வு செய்யப்பட்டும், அவருக்கான இருக்கை ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை தங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு விட்டது’ என தெரிவித்தார். </p>
<p>இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள கோரிக்கையை மறுபரிசீலனை செய்து அதற்கு தக்க ஆவண செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்றைய கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இடத்தில் இதுவரை அமர்ந்திருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இரண்டாவது வரிசையில் இடம் மாற்றப்பட்டுள்ளது. அவர் இருந்த இடத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. </p>
<p>இதேபோல் சில தினங்களுக்கு முன் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த <a title="செந்தில் பாலாஜி" href="https://tamil.abplive.com/topic/senthil-balaji" data-type="interlinkingkeywords">செந்தில் பாலாஜி</a>யின் இருக்கையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் எதிர்க்கட்சி பிரிவில் 2வது வரிசையில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு முதல் வரிசையில் இடமளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிமுகவின் நீண்ட நாள் கோரிக்கைக்கு முடிவு கிடைத்து விட்டது. </p>

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports






















சாகட்டும்