சவுக்கு சங்கருக்கு கிடைத்த‍து இடைக்கால ஜாமின்… ஆனால் சந்தோசப்பட எதுவும் இல்லையாம்…

தடுப்பு காவல் வழக்கில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டதற்கான காரணங்களை தமிழ்நாடு அரசின் சார்பில் விளக்கி கூறப்பட்டது.

ஆனால், சவுக்கு சங்கரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்கும் நோக்கில் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக, அவரது தாயார் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், தடுப்பு காவல் வழக்கில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும், சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தினர்.

தடுப்பு காவல் வழக்கில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில், பிற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவர் சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல் நீடிக்கிறது.