<p>சாமானியன் பட இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ராமராஜன் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.</p>
<h2><strong> நடிகர் ராமராஜன்</strong></h2>
<p>தமிழ் சினிமாவில் மக்களை கூட்டம் கூட்டமாக திரையரங்கை நோக்கி படையெடுக்க வைத்த நடிகர்களில் முதன்மையானவர் நடிகர் ராமராஜன் , எங்க ஊரு நல்ல ஊரு படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமான ராமராஜன் அடுத்தடுத்து கிராமத்து கதைகளை மையமாக கொண்ட படங்களில் நடித்து மக்கள் நாயகன் என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரரானார்.</p>
<p>எங்க ஊரு பாட்டுக்காரன் , எங்க ஊரு காவல்காரன் போன்ற படங்களின் வழியாக தொடர்ச்சியாக சாமானிய மக்களின் நாயகனாக நடித்தார் ராமராஜன். அவர் நடித்த கரகாட்டக்காரன் படம் 400 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடி சாதனைப் படைத்தது. நடிகராக 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ராமராஜ், 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும் இருக்கிறார்.</p>
<h2>சாமானியன்</h2>
<p>பத்து வருடங்கள் கழித்து ராமராஜன் தற்போது நடித்துள்ள படம் சாமானியன். ராகேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ராமராஜன் , ராதா ரவி , மைம் கோபி , எம்.எஸ் பாஸ்கர், வெங்கட், கே.எஸ் ரவிகுமார் , அறந்தாங்கி நிஷா , தீபா ஷங்கர் , சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராமராஜன் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.</p>
<h2>ரஜினியைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்கிறேன்</h2>
<p>”23 வருடங்கள் கழித்தும் ரசிகர்களை ராமராஜனை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு இசைஞானி இளையராஜாவும் முக்கிய காரணம். அவரது பாடல்கள்தான் என்னை வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றன. கரகாட்டக்காரன் படம் 465 நாட்கள் ஓடிக் கொண்டிருந்த நிலையிலேயே, தொடர்ந்து எட்டு 100 நாட்கள் ஓடிய படங்களையும் கொடுத்தேன்.சாமானியன் படத்தில் பாட்டே இல்லாமல் படம் கொடுத்திருக்கிறாயே என்று ராஜா கேட்டார். இதில் எனக்கு ஜோடியே கொடுக்கவில்லை என்றேன்.</p>
<p>எல்லாரும் இளையராஜா எனக்கு கொடுத்தது போல் வேறு நடிகர்களுக்கு பாடல்கள் கொடுக்கவில்லை என்று சொல்வார்கள். ஆனால் நான் கூட இளையராஜா ரஜினிக்கு கொடுத்த பாடல்களைப் போல் எனக்கு பாடல்கள் கொடுக்கவில்லை என்று பொறாமைப் பட்டிருக்கிறேன். முரட்டுக் காளைப் படத்தில் பொதுவாக என் மனசு தங்கள் மாதிரி ஒரு பாடல் எனக்கு கிடைத்தால் போதும் என்று நான் நினைத்திருக்கிறேன். ஆனால் சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரப் போல வருமா? என்கிற ஒரு பாடல் எனக்கு போதும். சிங்கப்பூரில் வேட்டி கட்டி ஆடிய ஒரே தமிழர் நான் தான். அந்தப் பாடலுக்காக மாட்டு வண்டியை எடுத்து செல்ல திட்டமிட்டோம். ஆனால் விமானத்தில் அனுமதி மறுத்துவிட்டார்கள்.” என்று ராமராஜன் இந்த நிகழ்ச்சியில் பேசினார்</p>

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports



























waste of time