கடந்த காலத்தில் ஏற்பட்ட விஷயங்களால் பாய்மரத்தையும் சொந்த ஊரையும் திரும்பிப் பார்க்காத முத்துக்காளி, மீண்டும் ஊருக்குச் சென்று மறுபடியும் பாய்மரப் படகு போட்டி பக்கம் திரும்புவது என்கிற வழக்கமான கமர்ஷியல் சினிமா கதையை புது ரூட்டில் ஓட்டியிருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி. கதாபாத்திரங்களை விளக்காமல் திரைக்கதையை விரிக்கும் படம், பல வினாக்களுடனே நகர்கிறது. இது லேசான எதிர்பார்ப்பைப் பற்றவைத்தாலும், நாம் எளிதாகக் கணிக்கும் டெம்ப்ளேட் சினிமா விஷயங்களே அடுத்தடுத்து நிகழ்கின்றன.
இதன் பிறகு பாதைக்கேற்ப சுக்கானை மாற்றுவதுபோல, திரைக்கதையைக் கொஞ்சம் விறுவிறுப்பான போட்டிக்குக் கூட்டிப் போகிறார்கள். பரபரப்பாக நடக்கும் பாய்மரப் படகு போட்டி, அங்கு நடக்கும் விபத்துகள், அதனைப் படம் பிடித்த விதம் ஆகியவை நம்மைக்கட்டிப் போடுகின்றன. அந்த ‘பாட்ஷா’ டெம்ப்ளேட் இடைவேளை, லேசாக மாஸ் மீட்டரையும் கொளுத்திப்போடுகிறது. இராமநாதபுரம் அருகில் வசிக்கும் மக்கள் அதிகமாக வளைகுடா நாடுகளுக்குப் பணிக்குச் செல்வது, அதனால் உண்டாகும் குடும்பத்துடனான பிரிவை வசனங்கள் இல்லாமல் நகைச்சுவைக் காட்சிகள் மூலமாக உணர்த்திய விதம் சிறப்பு!

தொடர்ந்து வரும் ஃபிளாஷ்பேக் காட்சிகள் லேசாகச் சோர்வு வலையை வீசினாலும், இடையிடையே சில விறுவிறு பந்தயங்கள் மூலம் நம்மைக் காப்பாற்றுகிறார்கள் திரைக்கதையாசிரியர்கள் திரள் சங்கர், மோகனவசந்தன், எல்ரெட் குமார் மற்றும் மதிமாறன் புகழேந்தி. க்ளைமாக்ஸ் காட்சியை, பரபரப்பான நிகழ்வுகளோடு கோத்திருப்பது ‘சீட் எட்ஜ்’ சினிமா அனுபவம்! ஆனால், இறுதியில் சில கேள்விகளைக் கடலில் கரைத்துவிட்டுச் சென்றிருப்பது ஏன் இயக்குநரே?!
























