<p>நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்க வாகனங்களில்&nbsp; பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் பறக்கும் படை சோதனை தொடங்கியது.</p>
<p><strong>நாடாளுமன்ற தேர்தல்</strong></p>
<p>தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை)தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும். 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.</p>
<p>விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக மொத்தம் 1,966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நாளன்று இம்மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 12,095 அரசு அலுவலர்கள், வாக்குச்சாவடிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.</p>
<p><strong>பறக்கும் படை சோதனை</strong></p>
<p>வாக்காளர்களுக்கு வழங்க வாகனங்களில் பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் பறக்கும் படையினரின் சோதனை தொடங்கியது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.<br />இந்நிலையில் தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசுப்பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை அமைத்து தீவிரமாக கண்காணிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p><strong>21 பறக்கும் படைகள் அமைப்பு</strong></p>
<p>விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமீறல்களை கண்டறிவதற்காக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 21 பறக்கும் படைகள் மற்றும் தொகுதிக்கு 3 நிலையான கண்காணிப்புக்குழு வீதம் 21 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பறக்கும் படை குழுவில் ஒரு அரசு அதிகாரியும், 3 போலீசாரும், நிலையான கண்காணிப்புக்குழுவில் ஒரு அரசு அதிகாரியும், 2 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இக்குழுவினர் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வசதியாக ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனியாக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்களில் தேர்தல் பறக்கும் படை என்பதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன.</p>
<p><strong>சோதனை தொடங்கியது</strong></p>
<p>இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்புக் குழுவினர் &nbsp;மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையை தொடங்கியுள்ளனர். இக்குழுவினர் மாவட்டத்தின் முக்கிய சாலையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு, பணம், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை யாரேனும் &nbsp;கொண்டு செல்கின்றனரா என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர். இக்குழுவினர் 8 மணி நேர முறைப்படி 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.</p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed