அம்பானி வீட்டு கல்யாணத்துக்காக 10 நாளில் பன்னாட்டு விமான நிலையம் கொண்டு வந்ததே, மோடி ஆட்சியின் சாதனை என கரூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கனிமொழி பேசினார்.
 
 

 
கரூர் மாநகர், வெங்கமேடு அண்ணா சிலை அருகில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதி மணியை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் வேடமணிந்த நபர்கள் பங்கேற்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
அப்போது பேசிய கனிமொழி, “சோனியா காந்தி, ஸ்டாலின், செந்தில் பாலாஜி ஆதரவு பெற்ற வேட்பாளர் ஜோதிமணி. கரூர் தொகுதிக்காக பலமுறை பாராளுமன்றத்தில் பேசி, போராடி சஸ்பெண்ட் ஆனவர். பாராளுமன்றத்தில் எதிர்த்து கேள்வி கேட்டால் சஸ்பெண்ட். வெளியே எதிர்த்து கேள்வி கேட்டால் சிறை என்ற நிலை தான் உள்ளது. உடல்நிலை சரியில்லை என்றாலும் இவ்வளவு நாள் செந்தில் பாலாஜி சிறையில் வைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் மறுக்கப்படுகிறது. தேர்தல் முடிந்ததும் வெளியே வந்து விடுவார். செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும், கரூரில் போட்டியிடாமல் அண்ணாமலை கோவை சென்று விட்டார். ஒரு தகர பெட்டி, இரண்டு ஃபேண்டுடன் போனவர். 
 
 

 
அண்ணாமலையும் சரி, அவரது கட்சியும் சரி பொய் மட்டுமே பேசி வருகின்றனர். 20 ஆயிரம் புத்தகம் படித்ததாக கூறுகிறார். ஒரு மனிதன் ஐந்து வயதில் ஆரம்பித்து, ஒரு நாளைக்கு இரண்டு புத்தகம் படித்தால் தான் அது சாத்தியம். புத்தகங்களை வாசித்ததாக கூறி ஏதேதோ பேசுகிறார். இது தான் தம்பி உனது தகுதி. எங்கள் தகுதி குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை. 15 லட்சம் போடுவதாக சொல்லி கையில் இருந்த 1000, 500-யையும் உங்களிடம் இருந்து பிடுங்கி விட்டார்கள். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. 410 ஆக இருந்த சிலிண்டர், தற்போது 1100 ரூபாய்க்கு விற்கிறது. மானியம் என்று சொல்லிவிட்டு இரண்டு மடங்கு விலை ஏற்றி விட்டனர். 
 
 

 
குழப்பத்தில் கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிக்கு, சிறு வியாபாரிகள் முதல், சிறிய தொழிற்சாலைகள் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. பாஜக ஆட்சி அதானி, அம்பானி போன்ற பணக்காரர்களுக்கான ஆட்சி. அம்பானி வீட்டு கல்யாணத்திற்காக பத்து நாளில் பன்னாட்டு விமான நிலையம் கொண்டு வந்ததுதான் மோடி ஆட்சியின் சாதனை. கல்விக் கடன் ரத்து இல்லை. விவசாயிகளுக்கு அடிப்படை ஆதார விலையும் இல்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான 68,607 கோடி ரூபாய் கடனை பாஜக ஆட்சி ரத்து செய்துள்ளது.  கரூர் தொகுதி மக்களுக்காக ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் தொகுதியில் 15-க்கும் மேற்பட்ட பாலங்கள் கொண்டு வந்த ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்களிப்பீர்” என்றார்.
 
 
 
 

Source link


Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports