<p>ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) எலைட் அம்பயர் குழுவில் இந்தியாவின் நிதின் மேனன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இடம்பெற்றுள்ளார். அதே நேரத்தில், இந்த எலைட் நடுவர் குழுவில் வங்கதேசத்தை சேர்ந்த ஷரபுத்தவுலா இப்னே ஷாஹித் தனது நாட்டிலிருந்து முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். </p>
<p>இந்தூரைச் சேர்ந்த நிதின் மேனன், கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா தொற்றின்போது எலைட் பிரிவில் சேர்ந்தார். அப்போது முதல் இப்போது வரை தொடர்ந்து ஐந்தாவது முறையாக இடம்பெற்று வருகிறார். நேற்று வெளியிடப்பட்ட 2024-25 சீசனுக்கான ஐசிசியின் 12 பேர் கொண்ட அம்பயர் பட்டியலில் மேனன் மட்டுமே ஒரே இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<h2><strong>ஐந்தாவது ஆண்டாக தொடர்ந்து இடம்பிடித்த மேனன்: </strong></h2>
<p>எஸ் ரவி மற்றும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எஸ். வெங்கடராகவன் ஆகியோருக்கு பிறகு ஐசிசி எலைட் அம்பயர் குழுவில் இடம்பெற்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நிதின் மேனன். ரவி 33 டெஸ்ட் போட்டிகளிலும், வெங்கடராகவன் 73 டெஸ்ட் போட்டிகளிலும் ஆன் – பீல்ட் அம்பயராக இருந்துள்ளனர். நிதின் மேனன் இதுவரை 23 டெஸ்ட், 58 ஒருநாள் மற்றும் 41 டி20 போட்டிகள் என மொத்தம் 122 சர்வதேச போட்டிகளில் ஆன் – பீல்ட் அம்பயராக இருந்துள்ளார். நிதின் மேனன் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதன் மூலம், 125 போட்டிகளில் நடுவராக இருந்த வெங்கடராகவனின் சாதனையை முறியடிப்பார் நிதின் மேனன். கடந்த ஆண்டு ஆஷஸ் தொடரில் அம்பயராக பங்கேற்கும் கனவும் நிதின் மேனனுக்கு நிறைவேறியது. </p>
<h2><strong>எலைட் பிரிவில் இணைந்த முதல் வங்கதேச நடுவர்: </strong></h2>
<p>ஓய்வுபெற்ற மரைஸ் எராஸ்மஸுக்கு பதிலாக வங்கதேசத்தின் ஷரபுத்தவுலா ஐசிசி எலைட் பிரிவில் இணைந்த முதல் வங்கதேச நடுவர் என்ற பெருமையை பெற்றார். ஷரபுத்தவுலா கடந்த 2006ம் ஆண்டு முதல் சர்வதேச அம்பயர் குழுவில் இடம் பெற்றுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் சர்வதேச அம்பயராக அறிமுகமானார். இதுவரை ஷரபுத்தவுலா 10 டெஸ்ட், 63 ஒருநாள் மற்றும் 44 டி20 சர்வதேச போட்டிகளில் ஆன் – பீல்ட் அம்பயராக இருந்துள்ளார். மேலும், 13 மகளிர் ஒருநாள் மற்றும் 28 டி20 சர்வதேச போட்டிகளில் ஆன் – பீல்ட் அம்பயராக இருந்துள்ளார். </p>
<p>இந்த பட்டியலில் இடம்பிடித்த பிறகு ஷரபுத்தவுலா வெளியிட்ட அறிக்கையில், “ ஐசிசி எலைட் அம்பயர் பிரிவில் இடம்பிடித்திருப்பது மிகப்பெரிய கவுரவம். இந்த பிரிவில் எங்கள் நாட்டிலிருந்து முதல் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டது சிறப்பானதாக்குகிறது. என் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை சரிவர செய்துகாட்ட ஆவலாக உள்ளேன். எனக்கு நிறைய அனுபவம் உள்ளது. மேலும், சவாலான பணிகளுக்கு தயாராக இருக்கிறேன்.” என தெரிவித்தார். </p>
<p>ஐசிசி எலைட் பிரிவில் ஆஃப் மேட்ச் ரெஃப்ரிஸ் 7 உறுப்பினர்களில் இருந்து ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 2024-25ம் ஆண்டிற்கான ஆஃப் மேட்ச் ரெஃப்ரிஸ் குழுவில் இருந்த கிறிஸ் பிராட் விடுவிக்கப்பட்டார். கிறிஸ் பிராட் 2003ம் ஆண்டு முதல் இந்த குழுவில் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். பிராட் இதுவரை 123 டெஸ்ட், 361 ஒருநாள் மற்றும் 135 டி20 போட்டிகள் மற்றும் 15 மகளிர் டி20 போட்டிகளில் அம்பயராக இருந்துள்ளார். ஐசிசி தலைமை நிர்வாகி ஜியோஃப் கிறிஸ் அலார்டைஸ் கூறியதாவது, “எமிரேட்ஸ் ஐசிசி எலைட் பேனல் ஆஃப் மேட்ச் ரெஃப்ரிகளில் கிறிஸ் பிராட் பக ஆண்டுகளாக முக்கிய உறுப்பினராக இருந்து தனது பங்கை சிறப்பாக செய்துள்ளார்” என தெரிவித்தார். </p>
<h2><strong>எமிரேட்ஸ் ஐசிசி எலைட் பேனல் போட்டி அம்பயர்கள்:</strong></h2>
<p>டேவிட் பூன் (ஆஸ்திரேலியா), ஜெஃப் குரோவ் (நியூசிலாந்து), ரஞ்சன் மதுகல்லே (இலங்கை), ஆண்ட்ரூ பைக்ராஃப்ட் (ஜிம்பாப்வே), ரிச்சி ரிச்சர்ட்சன் (வெஸ்ட் இண்டீஸ்), ஜவகல் ஸ்ரீநாத் (இந்தியா).</p>
<h2><strong>எமிரேட்ஸ் ஐசிசி எலைட் நடுவர் குழு:</strong></h2>
<p>குமார் தர்மசேனா (இலங்கை), கிறிஸ்டோபர் காஃப்னி, (நியூசிலாந்து), மைக்கேல் கோஃப் (இங்கிலாந்து), அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் (தென்னாப்பிரிக்கா), ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து), ரிச்சர்ட் கெட்டில்பரோ (இங்கிலாந்து), நிதின் மேனன் (இந்தியா), அஹ்சன் ரசா (பாகிஸ்தான்), பால் ரைபிள் (ஆஸ்திரேலியா), ஷரப்தௌலா இப்னே ஷாஹித் (வங்காளதேசம்), ராட் டக்கர் (ஆஸ்திரேலியா), ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்).</p>

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports





















Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/