<p><strong>பள்ளியில் தமிழில் பேசியதாக 5 ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை நாயகி &nbsp;மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</strong></p>
<p>சென்னை திருவொற்றியூர் கே.சி.பி ரோடு ஹன்சா ஜெம்ஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் கேசவன் குகன்யா தம்பதியினர். இவர்களுக்கு 10 வயதில் மனிஷ் மித்ரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. சிறுவன் மித்ரன் ராயபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். ஜனவரி 23 ஆம் தேதி பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்பு கொண்டு சிறுவன் கீழே விழுந்ததாகவும் இதனால் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் உடனடியாக பள்ளிக்கு வரும்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு பதறிப்போன பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு சென்றுள்ளனர். அங்கு தங்களது மகன் மித்ரன் காது அறுபட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ந்து போனார்கள். அதன்பின் அங்கிருந்து அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறுவனுக்கு உடனடியாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.&nbsp;</p>
<p>இதனை தொடர்ந்து, தண்டையார்பேட்டையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அன்று இரவே சிறுவனுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காது ஒட்டப்பட்டது. பள்ளியில் இருந்து வந்த சிறுவன் தாய் குகன்யாவிடம், விளையாடிக் கொண்டிருக்கும்போது தமிழில் பேசியதால் நாயகி என்ற ஆசிரியர் தன்னை தாக்கியதாக கூறியுள்ளான். மேலும், காதை திருகியதில் காது அறுபட்டதாகவும் தெரிவித்துள்ளாண். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று கடுமையாக பேசியுள்ளனர். சற்றும் பிடி கொடுக்காத நாயகி ஆசிரியரின் திமிர் பேச்சை கேட்ட தாய் குகன்யா, அவரை அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் தரப்பில் &nbsp;ராயப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
<p>இதனிடையில் தாய் குகன்யா, ஆசிரியை நாயகியை அடித்ததால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு புகாரையும் ராயபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழில் பேசியதற்காக ஆசிரியர் நாயகி செய்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>

Source link

Author

anbilchinnathambi@gmail.com

Related Posts