சென்னை: சென்னையின் வணிக மற்றும் பொழுதுபோக்கு வரைபடத்தையே மாற்றியமைக்கும் ஒரு பிரம்மாண்ட மாற்றத்திற்கு ஐடி காரிடரான ராஜீவ் காந்தி சாலை தயாராகி வருகிறது. இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான பிரெஸ்டீஜ் குழுமம் இங்கே பிரம்மாண்ட மால் ஒன்றை கட்ட உள்ளது.
தென் சென்னையின் பெருங்குடி பகுதியில் போரம் ஒன் ஓ.எம்.ஆர் என்ற மெகா வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகளை அந்த நிறுவனம் தீவிரமாகத் தொடங்கியுள்ளது. கட்டி முடிக்கப்படும் போது, இதுவே சென்னையின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் மற்றும் ஒருங்கிணைந்த வணிக வளாகமாக உருவெடுக்கும்.

சுமார் 1.7 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் (ஒட்டுமொத்த பரப்பளவு சுமார் 1.96 மில்லியன் சதுர அடி வரை) இந்த மாபெரும் வளாகம் பிரம்மாண்டமாக உருவாகிறது. 2 அடித்தள அடுக்குகள் + தரைத்தளம் + 17 தளங்கள் (2B+G+17 Floors) என்ற பிரம்மாண்ட கட்டமைப்புடன் எழும் இந்த கட்டிடம், சர்வதேச தரத்திலான ஷாப்பிங், உயர்தர அலுவலகங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல் வசதிகளை ஒரே கூரையின் கீழ் கொண்டுவருகிறது.
உலகத்தரம்: என்னென்ன வசதிகள்?
ஐடி ஊழியர்கள், தென் சென்னை மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த வளாகம் பல பிரத்யேக அம்சங்களுடன் வடிவமைக்கப்படுகிறது.
மெகா ரீடெய்ல் மால்: சுமார் 10 லட்சம் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவு பிரத்யேகமாக ஷாப்பிங் கடைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய முன்னணி பிராண்டுகளின் நூற்றுக்கணக்கான விற்பனையகங்கள் அமையவுள்ளன.
அதிநவீன மல்டிபிளக்ஸ் திரையரங்கம்: சுமார் 1,700-க்கும் அதிகமான இருக்கைகளுடன் கூடிய நவீன திரையரங்க வளாகம், பிரம்மாண்ட கேமிங் மண்டலங்கள் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு மையங்கள் இடம்பெறுகின்றன.
கிரேடு-ஏ கார்ப்பரேட் அலுவலகங்கள்: கட்டிடத்தின் மேல் தளங்களில் நவீன சுற்றுச்சூழல் தரங்களுடன் கூடிய உயர்தர ஐடி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகப் பயன்பாட்டுக்கான இடங்கள் அமைக்கப்படுகின்றன.
மேரியட் மாக்ஸி சொகுசு ஹோட்டல்: புகழ்பெற்ற மேரியட் சர்வதேச நிறுவனத்தின் லைஃப்ஸ்டைல் ஹோட்டல் பிராண்டான ‘மாக்ஸி’, 166 பிரத்யேக அறைகளுடன் இந்த வளாகத்தில் அமைய உள்ளது. இது கார்ப்பரேட் விருந்தினர்கள் மற்றும் சர்வதேச பயணிகளுக்கு நவீன தங்கும் அனுபவத்தை வழங்கும்.

மெட்ரோ ரயிலில் பெண் பயணியை ரகசியமாக போட்டோ எடுத்த CISF வீரர்! துப்பாக்கி நீட்டி மிரட்டியதால் பதற்றம்
மெட்ரோ வசதி
ஓ.எம்.ஆர் சாலையில் லட்சக்கணக்கான ஐடி பணியாளர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் வசித்து வரும் போதிலும், வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால் அல்லது ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ போன்ற மிகப்பெரிய பொழுதுபோக்கு மால் ஓ.எம்.ஆர் உட்பகுதியில் நீண்டகாலமாக இல்லாமல் இருந்தது. அந்த இடைவெளியை ‘போரம் ஒன் ஓ.எம்.ஆர்’ முழுமையாக நிறைவு செய்யவுள்ளது.
பெருங்குடி சந்திப்பில் அமைந்துள்ளதால், வேளச்சேரி, அடையாறு, துரைப்பாக்கம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளிலிருந்து மிக எளிதாக இந்த மாலுக்குச் செல்ல முடியும். மேலும், தற்போது வேகமாக நடைபெற்று வரும் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் 3-வது வழித்தடம் (மாதவரம் – சிறுசேரி சிப்காட்) ஓ.எம்.ஆர் சாலையிலேயே அமைவதால், மெட்ரோ ரயில் மூலம் மக்கள் போக்குவரத்து நெரிசலின்றி நேரடியாக மால் வளாகத்திற்கு வரக்கூடிய இணைப்பு வசதியும் கிடைக்கவுள்ளது.
வார இறுதி நாட்களில் வரக்கூடிய லட்சக்கணக்கான வாகனங்களை நெரிசலின்றி கையாளும் வகையில், இரண்டு அடித்தள அடுக்குகளில் தானியங்கி வாகன நிறுத்துமிடம் மற்றும் ஸ்மார்ட் பார்க்கிங் வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
தற்போது அடித்தளம் மற்றும் கட்டமைப்பு கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் 2027-ம் ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.























