பஞ்சாப்பைச் சேர்ந்த அதிகமானோர் கனடா மற்றும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். அவர்கள் அந்த நாடுகளில் குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு இந்தியாவிற்கு வந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அது போன்று அமெரிக்காவில் கம்பெனி நடத்தி வந்த மஞ்ஜித் சிங் பேடி அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தின் பெயரில் மோசடி செய்துவிட்டு இந்தியாவிற்குத் தப்பி வந்திருந்தார். 2024 மற்றும் 2025க்கு இடையில் தான் நடத்தி வந்த கம்பெனி மூலம் சுமார் $600,000 டாலர் அளவுக்கு மோசடி செய்திருந்தார்.
அமெரிக்காவில் துணை ஊட்டச்சத்து உதவித் திட்டத்தில் இந்த மோசடியைச் செய்து இருந்தார். இதனால் அவர் மிகவும் தேடப்படும் குற்றவாளி என்று எப்.பி.ஐ அறிவித்தது. அவரது பாஸ்போர்ட் மற்றும் பிற பொருட்களை ஏஜென்சியிடம் ஒப்படைக்குமாறு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
ஆனாலும் அவற்றை ஒப்படைக்காமல் கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் கனடா வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பேடி குறித்து தகவல் கொடுத்தால் 1.50 லட்சம் டாலர் சன்மானம் கொடுக்கப்படும் என்று எப்.பி.ஐ அறிவித்து இருந்தது. கடந்த மாதம் பேடி மீது ஜலந்தர் போலீஸ் நிலையத்தில் மோசடி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரைத் தேட ஆரம்பித்தனர்.
கடந்த சில நாட்களாக பேடியைத் தேடி வந்தனர். அவரைக் கண்டுபிடிக்க ஒரு சிறப்புக் குழுவை நியமித்தனர். பேடி தனது வாகனத்தில் சென்று கொண்டிருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவரது வாகனத்தை இடைமறித்து அவரை ஜலந்தரில் கைது செய்தனர். தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஒருங்கிணைந்த முயற்சி மூலம் பேடி கைது செய்யப்பட்டதாக ஜலந்தர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பேடி வாஷிங்டனில் உள்ள டகோமாவில் ஆசிய மளிகைக் கடை என்ற சிறிய மளிகைக் கடையை நடத்தி வந்தார். துணை ஊட்டச்சத்து உதவித் திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு அவர்களின் மின்னணு நன்மை பரிமாற்ற அட்டைகள் மூலம் அவர் உணவை விற்றதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், உணவை விற்பதற்குப் பதிலாக, பேடி அவர்களின் அட்டைகளை ஸ்வைப் செய்து பணத்தைக் கொடுத்தார், மேலும் வருமானத்தில் பாதியைத் தனக்கு வைத்துக்கொண்டார். மோசடிக்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர், அவரைக் கைது செய்யாமல் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.
























