இறுதிப்போட்டி என்றாலே பரபரப்பு இருக்கும் அதுவும் கோப்பையை முடிவு செய்யும் ஆட்டம் என்றால், கடைசி பந்து வரை யார் பக்கம் ஆட்டம் திரும்பும் என்று கணிக்க முடியாது. ஆனால் சேப்பாக்கத்தில் நேற்று நடந்த TNPL 2026 இறுதிப்போட்டியில், அந்தக் கணக்கு வேறு மாதிரி எழுதப்பட்டது. முதலில் பேட்டிங்கில் 182 ரன்கள் குவித்த கோவை கிங்ஸ், அடுத்து மதுரை பாந்தர்ஸை வெறும் 98 ரன்களுக்கு சுருட்டி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற கோவை கிங்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், பாலசுப்ரமணியம் சச்சின் – ஆண்ட்ரே சித்தார்த் இணை களத்தில் நிலைத்து நின்றது.
இருவரும் சேர்ந்து 117 ரன்கள் குவித்து கோவையின் இன்னிங்ஸை வலுப்படுத்தினர். சச்சின் 39 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஆண்ட்ரே சித்தார்த் தனது அதிரடியைத் தொடர்ந்தார். 47 பந்துகளில் 82 ரன்கள்! 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் விளாசிய ஆண்ட்ரே சித்தார்த், இறுதிப்போட்டியில் கோவை அணிக்கு தேவையான வேகத்தை கொடுத்தார். அவரது அதிரடி ஆட்டத்தின் காரணமாக கோவை கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. மதுரை தரப்பில் பி. சரவணன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
























