Last Updated:
தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தேசிய அளவிலான தொழில் பழகுநர் சான்றிதழுடன் குறைந்தபட்சமாக ரூ.8,000 முதல் அதிகபட்சமாக ரூ.18,000 வரை மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படும்.
சென்னை மாவட்டத்தில் தொழில்திறன் மேம்பாட்டுக்கான முக்கிய முயற்சியாக தேசிய தொழில் பழகுநர் (Apprenticeship) முகாம் ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆர்.கே. நகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த முகாம், ஐ.டி.ஐ மற்றும் பள்ளி கல்வி முடித்த இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு இணைப்பு வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாம் சென்னை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் இந்திய அரசின் தென் மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைப்பு இணைந்து நடத்துகிறது. அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் ஒரே இடத்தில் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான தொழில் பழகுநர்களை நேரடியாக தேர்வு செய்யும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
ஐ.டி.ஐ முடித்தவர்கள் மட்டுமல்லாமல், 8, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் இதில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்துறையில் நேரடி பயிற்சி மற்றும் வேலை அனுபவம் பெற விரும்பும் இளைஞர்களுக்கு இது முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தேசிய அளவிலான தொழில் பழகுநர் சான்றிதழுடன் மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படும். குறைந்தபட்சமாக ரூ.8,000 முதல் அதிகபட்சமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். இந்த திட்டம், பயிற்சியுடன் வருமானம் பெறும் வாய்ப்பையும் உருவாக்குகிறது.
பங்கேற்பாளர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, அசல் கல்வி சான்றிதழ்களுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை அனுபவத்தை ஒரே நேரத்தில் வழங்கும் இந்த முகாம், சென்னை இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Chennai,Tamil Nadu























