சூர்யாவின் “கருப்பு’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், அனகா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
படத்திற்குக் கிடைத்துவரும் வரவேற்பைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருக்கும் திரையரங்குகளுக்குத் தியேட்டர் விசிட் சென்று வருகிறார் ஆர்.ஜே. பாலாஜி. இந்நிலையில், நேற்று திண்டுக்கல் சென்றவர் அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் இனி நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “எனக்கு நானே ஒரு கதாபாத்திரத்தை எழுதிக்கொள்ளவில்லை என்றால் எனக்காக வேறு யார் எழுதுவார்கள்?
நானே ஒரு படம் இயக்கிவிட்டு, அதில் என்னைத் தவிர வேறு யாரையாவது நடிக்க வைத்தால் எனக்கான வாய்ப்பை யார் தருவது? அப்படி எனக்காகவே பார்த்துப் பார்த்து எழுதிய கதாபாத்திரம்தான் ‘பேபி கண்ணன்’.
இருந்தாலும், வேறு யாராவது எனக்காகக் கதைகள் எழுதினால், தாராளமாக நடிப்பேன். இந்தத் திரைப்படம் முடிந்த பிறகு நான் கதாநாயகனாக நடிக்கும் சில படங்கள் வரிசையில் உள்ளன.
எனவே, ‘பேபி கண்ணன்’ போன்ற சுவாரஸ்யமான, தனித்துவமான கதாபாத்திரங்களை யாராவது உருவாக்கினால், அதில் நான் கண்டிப்பாக நடிப்பேன்” என்றவர், ‘கருப்பு’ படத்தின் கதை உருவான விதம் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.






















