வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏராளமான வெளிநாட்டுத் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் வந்தபோது எழுந்த ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மைச் சிக்கல்களை நேபாள அரசாங்கம் நினைவு கூர்ந்தது. பல குழுக்கள் இருந்தும், நாடுகளுக்கு இடையேயான போட்டியால், மீட்புப் பணிகளை நிர்வகிப்பதில் சிரமங்களை ஏற்படுத்தின.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நாடுகளின் தூதரக அழுத்தங்களைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சில தொழில்நுட்ப உதவிகளைப் பெற நேபாளம் சம்மதித்துள்ளது.

அதன் அடிப்படையில், இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் நிபுணத்துவ உதவிகளைப் பெற நேபாள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக சுரங்கப் பாதை மீட்புப் பணிகள், டி.என்.ஏ (DNA) பரிசோதனைகள் மற்றும் தடயவியல் ஆய்வுகள் போன்ற சிறப்புத் துறைகளில் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான வெளிநாட்டு நிபுணர்களை அனுமதிக்கத் தீர்மானித்துள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் மருத்துவக் குழு, சுரங்கப் பாதை மீட்புக் குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆகியவை நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.























