அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அடிப்படையிலான குடியேற்றமற்ற விசாக்களில் (Non-immigrant visas) பணிபுரிபவர்கள், வேலை இழந்த பிறகு சட்டப்பூர்வமாகத் தங்குவதற்காக வழங்கப்பட்டு வரும் அதிகபட்ச 60 நாள் அவகாசத்தை (Grace Period) முற்றிலுமாக நீக்குவதற்கான புதிய விதிமாற்றத்தை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS-Department of Homeland Security) தீவிரமாக முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டம் குறிப்பாக எச்-1பி (H-1B) விசாவில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நடைமுறை என்ன?
தற்போது H-1B, L-1, O-1 உள்ளிட்ட குறிப்பிட்ட வேலைவாய்ப்பு விசாக்களை வைத்துள்ளவர்கள் திடீரென வேலை இழந்தால், அதிகபட்சம் 60 நாள்கள் அல்லது விசா அனுமதிக் காலம் முடியும் நாள், இவற்றில் எது முந்துகிறதோ அதுவரை, அமெரிக்காவில் சட்டப்பூர்வமாகத் தங்குவதற்கான அவகாசம் வழங்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்திற்குள் புதிய வேலை வழங்குநரைத் (Employer) தேடுவது, விசா நிலையை (Visa Status) மாற்றுவது அல்லது நாட்டைவிட்டு வெளியேறுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையின் பரிசீலனை
இந்த 60 நாள் அவகாசத்தை முழுமையாக ரத்து செய்யும் விதமாக, “Eliminating the Discretionary 60-day Grace Period” என்ற முன்மொழிவைத் திட்டத்தை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும் (DHS), குடியுரிமை மற்றும் குடியேற்றப் பிரிவும் (USCIS) இணைந்து தயாரித்துள்ளன. இந்த முன்மொழிவு மீதான சட்டப்பூர்வ மதிப்பீடுகளை வெள்ளை மாளிகையின் ஒழுங்குமுறை விவகார அலுவலகம் (OIRA – Office of Information and Regulatory Affairs) தற்போது நிறைவு செய்துள்ளது. இருப்பினும், இது இப்போதைக்கு அமலுக்கு வந்த இறுதி விதி அல்ல; பொதுமக்களின் கருத்துக்கேட்பு உள்ளிட்ட அடுத்தடுத்த விதிமுறை நடைமுறைகள் இன்னும் பாக்கியுள்ளன.























