இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதிக்கான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நேற்று (செப்.5) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய தொகுதி எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத், தொகுதி மேம்பாட்டு நிதி சரியாகப் பயன்படுத்தப்படாதது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கடுமையாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இக்கூட்டத்தில் பேசிய கங்கனா ரனாவத், “எனது தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 90 சதவீத நிதியைச் செலவிட்டுவிட்டதாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். ஆனால், கள நிலவரப்படி வெறும் ரூ.50 லட்சம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கணக்கு அறிக்கைகளுக்கும் உண்மையான செலவினங்களுக்கும் பெரிய அளவில் முரண்பாடு உள்ளது.
























