நடிகர்கள் சந்தோஷ், வினோத் கிஷன், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா ஆகியோர் நடிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்காக அவர்களைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.
முதலில் பேசிய வினோத் கிஷன், “நான் சினிமாவில் வந்த 16 வருஷமும் என்னை வழிநடத்துறது எனக்குச் சினிமா மேல இருக்கிற பற்றுதான். இவ்வளவு வருஷத்துல எவ்வளவு அடிபட்டிருந்தாலும், என் மேல எனக்கே சந்தேகம் வந்திருந்தாலும், இவ்வளவு வருஷங்கள் நான் பயணிக்கிறதுக்குக் காரணம் எனக்குச் சினிமா மேல இருந்த நம்பிக்கைதான்.
இந்த கதையை டைரக்டர் என்கிட்ட சொல்லும்போது, எனக்கு இந்த கதை ரொம்ப புதுசா இருந்தது. பொதுவாகவே எனக்கு நெகட்டிவ் ரோல்ஸ்தான் அதிகம் வரும்.
ஆனா, இந்த கேரக்டர் கொஞ்சம் ஜாலியா ஹியூமர் பண்ண வேண்டியது இருந்ததால எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இந்த கதையை டைரக்டர் சொல்லும்போதே நான் சரின்னு சொல்லிட்டேன்” என்கிறார்.
தொடர்ந்து பேசிய ரேஷ்மா, “முதல்ல இந்த படத்தோட ஒன்லைன் கேட்டபோது கதைக்குனு ஒரு தனித்துவம் இருந்தது. அதையும் தாண்டி, இந்த கதையில நடிச்சிருக்கிற எல்லாருக்குமே சுதந்திரமா அவங்க அவங்க கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை இயக்குநர் ஏற்படுத்திக் கொடுத்தாரு” என்றார்.
திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசிய சந்தோஷ், “இயக்குநர் ஒரு சாதாரணமானவரா இருந்தா கண்டிப்பா இந்த மாதிரி கதை எழுதியிருக்க முடியாது” என்று நகைச்சுவையாகக் கூறி, “இந்த படத்துல வர நான்கு முக்கியமான கதாபாத்திரங்களுக்கும் பெயர் வைப்பது, அவங்க என்ன வேலை செய்றாங்கன்றதை நிர்ணயிக்கிறது, அவங்க எப்படி அந்த வேலைக்குச் சேர்ந்தாங்கங்கிறதைச் சொல்றதுன்னு ஒரு ஒரு நுணுக்கங்களையும் பார்த்துப் பார்த்து இயக்கியிருக்காரு.

இந்த படத்துல நடக்குற எல்லாமே ஒரு காரணத்தோட கனெக்ட் பண்ணி எடுத்திருக்காரு. ஒவ்வொரு நாள் ஷூட்டிங்லயும் நான் நடிச்ச சீன்ஸ்ல என்னோட முழு உழைப்பைப் போட்டிருக்கேனானு உறுதி செய்து கொள்வேன்.
இயக்குநரும் அதுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுவாரு. எந்த சீனா இருந்தாலும், டைரக்டருக்குச் சரின்னு தோன்ற வரைக்கும் நடிக்கணும். ஆனா, ஒரு சில நேரத்துல எனக்கு என் நடிப்பு அந்த சீன்ல திருப்தியா இல்லனாலும் டைரக்டருக்கு அது ரொம்ப சூப்பரா இருக்கும்” என்றார்.
பொன்னியின் செல்வனில் சந்தோஷுக்குத் துணை நடிகையாக இருந்த சாராவைப் பற்றிப் பேசியவர், “துரந்தர் படத்துக்குப் பிறகு சாராவுக்குக் கிடைச்சிருக்கிற வெற்றி எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு” என்றார்.
தொடர்ந்து பேசிய அறிமுக நடிகை சம்யுக்தா, “‘கட்சி சேர’ பாட்டுக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும்னு நாங்க எதிர்பார்க்கல. பாட்டு ஆல்பம், வெப் சீரிஸ்னு பண்ணினாலும் கூட படத்துல அறிமுகம் ஆகும்போது தமிழ் படத்துலதான் அறிமுகமாகணும்னு ஆசை இருந்தது.
இயக்குநர் என்கிட்ட கதை சொல்லும்போது எனக்கு மேஜிக் மாதிரி ஃபீல் ஆச்சு. நாலு பேரோட கேரக்டரையும் மிமிக்கிரி பண்ணி நடிச்சு காமிச்சாரு. கேரக்டரோட ஆழத்தைப் புரிய வச்சாரு. எனக்கு எந்த கேரக்டர் பண்ணலாம்னு சாய்ஸ் வந்தப்போ எனக்குப் பிரியா கேரக்டர்தான் கனெக்டிங்கா இருந்தது.
நான் டைரக்டர்கிட்ட ஏன் பிரியா, கார்த்திக்ன்னு பொதுவான பேரா வச்சிருக்கீங்கன்னு கேட்டப்போ, இனிமேல் பிரியா கார்த்திக்னு சொன்னா இந்த கேரக்டர்தான் ஞாபகம் வரணும்ன்றதுனாலதான் வச்சிருக்கேன்னு சொன்னாரு. இந்த கேரக்டரை முழுசா தெரிஞ்சுக்க வாய்ப்புக் கொடுத்தாங்க.

முதல் படம் என்பதால ரொமான்ஸ் சீன்ஸ் நினைச்சு கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. கதை கேட்கும்போது அம்மாவும் கூடத்தான் இருந்தாங்க. அப்படியே அம்மாவ பார்த்தேன், அம்மாவும் கதைக்குத் தேவை என்பதைப் புரிஞ்சுக்கிட்டாங்க. அப்புறம் அப்பாகிட்டயும் புரிய வச்சோம்.
ஒரு படம்ன்றது எல்லோருடைய கூட்டு முயற்சிதான். எங்க எல்லாத்துக்கும் அதைப்பற்றிய புரிதல் இருந்ததுனால, நடிக்கும்போது இன்னும் சுலபமா இருந்தது” என்கிறார்.
தொடர்ந்து சாய் அபியங்கர் பற்றிப் பேசியவர், “‘கட்சி சேர’ பாட்டுக்காக சாய் என்கிட்ட வந்தப்பவே அவரைப் பார்த்து, இந்த வயசுல கம்போஸும் பண்ணிட்டுப் பாடவும் செஞ்சுட்டு ரொம்ப டேலண்டடா இருக்காங்க, கண்டிப்பா சாய்க்கு நல்ல ஃபியூச்சர் இருக்குன்னு அப்பவே நினைச்சேன்” என்றார் பெருமையுடன்.
முழு பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை செய்யவும்.






















