<p>கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. குறிப்பாக, கூட்டணியை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதே சமயம், பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணியும் அதிரடியாக செயல்பட்டு வருகிறது.</p>
<p>ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், I.N.D.I.A கூட்டணியில் இருந்து பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் விலகியது ஆகியவை எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை தந்தது. இருப்பினும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய <br />காங்கிரஸ் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. </p>
<h2><strong>தேர்தலுக்கு தயாரான I.N.D.I.A கூட்டணி:</strong></h2>
<p>இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியுடன் 5 மாநிலங்களில் தொகுதி பங்கீட்டை உறுதி செய்துள்ளது காங்கிரஸ். அடுத்தடுத்த சவால்களை சந்தித்து வந்த I.N.D.I.A கூட்டணிக்கு இது பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது. இறுதி செய்துள்ள தொகுதிப் பங்கீட்டின் படி, டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 4இல் ஆம் ஆத்மியும் 3இல் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட உள்ளது.</p>
<p>மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி மற்றும் புது டெல்லி ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது. வடகிழக்கு டெல்லி, வடமேற்கு டெல்லி மற்றும் சாந்தினி சௌக் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. அதேபோல, குஜராத், ஹரியானா, கோவா, சண்டிகர் ஆகிய மாநிலங்களிலும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. </p>
<p>குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளில் காங்கிரஸ் 24 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 2 தொகுதிகளிலும் ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 1 தொகுதியிலும் போட்டியிட உள்ளது. கோவாவில் உள்ள 2 தொகுதிகளிலும் சண்டிகரில் உள்ள 1 தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தொகுதி பங்கீடு தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.</p>
<h2>பாஜகவுக்கு தலைவலியாக மாறுமா தலைநகரம்?</h2>
<p>சண்டிகர் மேயர் தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. வெற்றி பெறுவதற்கு தேவையான கவுன்சிலர்களின் ஆதரவு காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு இருந்த போதிலும், பாஜக வேட்பாளரை வெற்றியாளராக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, காங்கிரஸ் – ஆம் ஆத்மி கூட்டணி வேட்பாளரை வெற்றியாளராக அறிவித்தது.</p>
<p>உத்தர பிரதேசத்திலும் I.N.D.I.A கூட்டணியின் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 80 தொகுதிகளில் 17 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. மீதமுள்ள 63 இடங்களில் சமாஜ்வாதி கட்சி போட்டியிட உள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் I.N.D.I.A கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. </p>
<p>ஆனால், 8 தொகுதிகளில் உடன்பாடு எட்டப்படவில்லை. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் I.N.D.I.A கூட்டணி சார்பாக களமிறங்க உள்ளன.</p>

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports






















Great content! Keep up the good work!