கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், பையன்னூரில் சி.பி.எம் சார்பில் தற்போதையை அரசியல் நிலையை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கேரள மாநில சட்டசபை தேர்தல் குறித்தும், பையன்னூர் தொகுதியின் தேர்தல் நிலவரம், உட்கட்சி விவகாரங்கள் மற்றும் தற்போதைய ஆளும் அரசு மீதான விமர்சனங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார். பொதுக்கூட்டத்தில் பினராயி விஜயன் பேசுகையில், “சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் அரசு தொடர்ச்சியாக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது ஆபத்தாக முடியும் என்று சிலர் விஷமப் பிரச்சாரம் செய்தனர். சில மக்கள் அதை நம்பவும் செய்தனர். சில வலதுசாரி ஊடகங்கள் இல்லாத கதைகளைப் பரப்பின. எதிர்க்கட்சிகளும் வலதுசாரி ஊடகங்களும் இணைந்து திட்டமிட்ட ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டன. எத்தகைய எதிர்ப் பிரச்சாரங்கள் வந்தாலும் எல்.டி.எஃப்-ஆல் உறுதியாக நின்று வெற்றி பெற முடிகிற தொகுதிகள் சில உள்ளன. அதில் ஒன்றுதான் பையன்னூர். இத்தொகுதி உருவான காலம் முதலே சி.பி.எம் வேட்பாளர்களே தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளனர். இங்கு போட்டியிட்ட அனைவரும் சிறப்பான வெற்றிகளையே பதிவு செய்துள்ளனர். 2021 சட்டமன்றத் தேர்தலில் 62 சதவீத வாக்குகளைப் பெற்று மதுசூதனன் வெற்றி பெற்றார். எந்தவொரு அரசியல் அலையையும், பின்னடைவையும் எதிர்கொள்ளும் வலிமை பையன்னூர் தொகுதிக்கு இருந்தது. அப்படியிருக்க, பையன்னூரில் தோல்வி ஏற்பட என்ன காரணம் என்ற கேள்வி எழும். இதற்கு ஒட்டுமொத்த கேரளத்தில் நிலவிய காரணங்களை மட்டுமே கணக்கில் கொண்டால் போதாது. பையன்னூர் மக்களும் வாக்காளர்களும் சி.பி.எம் மீது அளப்பரிய அன்பு கொண்டவர்கள். ஆனால், கட்சியின் உள்ளே இருந்துகொண்டே கட்சியின் நம்பகத்தன்மையை சீர்குலைக்க சிலர் முயற்சித்தனர்.
ஒரு கம்யூனிஸ்ட்டாக இருப்பவர் எதையெல்லாம் செய்யக்கூடாதோ, அதையெல்லாம் செய்த ஒரு சூழல் உருவானது. அதன் விளைவாக மக்களிடையே சந்தேகங்கள் எழுந்தன. அங்கு உண்மையின் வெளிச்சம் மங்கியது. யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு எதிராக கட்சி உறுதியான நடவடிக்கை எடுக்கும். அதுவே சி.பி.எம் கட்சியின் நிலைப்பாடு. கட்சிக்கு எதிராக செயல்பட்டால் அவர் யார் என்று பார்க்கமாட்டோம், நிச்சயம் நடவடிக்கை பாயும். வாக்குகளில் ஏற்பட்ட சரிவை நாங்கள் மிகத் தீவிரமாகப் பார்க்கிறோம். கட்சி அதை விரிவாகப் பரிசீலித்துள்ளது. எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முழு விழிப்புணர்வுடன் இருக்கிறோம். கட்சிக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் மறுசிந்தனை செய்ய வேண்டிய தருணம் இது. தாங்கள் செய்தது சரியா என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். கட்சி வெளிப்படையாக என்ன சொன்னதோ, அதில் எந்தவித கபடமும் இல்லை. மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம். கட்சியின் நிலைப்பாடு எப்போதும் நேர்மையானது, அதற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

காங்கிரஸ் அரசு மதவாதத்தின் முன் மண்டியிட்டுவிட்டது. போதைப்பொருளுக்கு எதிரான ‘ஆப்பரேஷன் தூஃபான்’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவது நல்ல விஷயம்தான். ஆனால் முதலமைச்சரின் ஆட்களே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர். மலப்புறத்தில் வைத்து ஒருவரை காவல்துறை சோதனை செய்கிறது. அப்போது அவர் தான் முதலமைச்சரின் சொந்த ஆள் என்று கூறுகிறார். பின்னர் காசர்கோட்டில் வைத்து அவரைச் சோதனையிட்டபோது போதைப்பொருள் பிடிபட்டது. அவர் பிடிபட்ட உடனேயே வழக்கின் போக்கே தலைகீழாக மாறியது. அவருடைய கைபேசியைச் சோதிக்கக் கூடாது என்றும், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கக் கூடாது என்றும் மேலிடத்திலிருந்து உத்தரவுகள் வந்தன. இதுதான் இன்று கேரளத்தில் நடந்துகொண்டிருக்கிறது” என்றார்.
























