பாஜக அமைச்சரை  நடுரோட்டில் அக்ரோஷமாக கேள்வி கேட்டு  அலற விட்ட வீரமங்கை  - Kumudam

மும்பையின் வொர்லி பகுதியில் ஆளும் மகாயுதி கூட்டணியைச் சேர்ந்த பாஜகவினர், எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடியைக் கண்டித்துப் பேரணி நடத்தினர். மத்திய அரசில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாததற்கு எதிர்க்கட்சிகளே காரணம் எனக் கூறி நடத்தப்பட்ட இந்தப் பேரணியால், வொர்லி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மாலை 5 மணிக்குத் தொடங்க வேண்டிய இந்தப் பேரணி தாமதமானதால், ஜம்போரி மைதானம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் அணிவகுத்து நின்றன. அப்போது, தனது குழந்தையைப் பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காகக் காரில் சென்ற பெண் ஒருவர், நீண்ட நேரமாக நெரிசலில் சிக்கித் தவித்தார். பொறுமையிழந்த அந்தப் பெண், காரை விட்டு இறங்கி நேரடியாகப் போராட்டக் களத்திற்குள் புகுந்தார்.

நேரடியாக அமைச்சர் கிரிஷ் மகாஜனிடம் சென்ற அந்தப் பெண், “அருகில் காலி மைதானம் இருக்கும்போது பொதுமக்களுக்கு இடையூறாகச் சாலையில் ஏன் போராடுகிறீர்கள்?” எனக் கத்தினார். மேலும், “இங்கிருந்து வெளியேறுங்கள்” என ஆவேசமாக முழக்கமிட்ட அவர், தடுத்த காவல்துறையினரையும் கடுமையாகச் சாடினார். உயர் அதிகாரிகளிடம் மட்டுமே பேசுவேன் என ஒற்றைக்காலில் நின்ற அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்திய போலீசார், பின்னர் அவரை ஓரமாக அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *