அப்பாவித்தனம் நிரம்பிய உடல்மொழி, எப்போதும் வியர்வை படிந்த முகம், ஓய்வின்றி மகன்களுக்காக அலைந்து திரியும் குணம் எனப் படத்தை நகர்த்திக் கூட்டிச் செல்கிறார் ஸ்வாசிகா. அதில் தயக்கம், நடுக்கம், ஏக்கம், வெளிக்காட்டிக்கொள்ளாத ஆசை எனப் பல உணர்வுகளில் பயணித்திருப்பவர், நடிப்பில் பெரும் விளைச்சலையும் தந்திருக்கிறார். கண்டிப்பு மற்றும் அக்கறையுடன் மகன்களுக்காகவும், மகன்களைச் சுற்றியும் யோசிக்கும் இடங்களில் கலங்கவும் வைக்கிறார். ஆனால், அவரின் டப்பிங்கிற்கு கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மூத்த மகனாக அஜய் திஷான் பொறுப்பும் தெளிவும் கொண்டவராக வருகிறார்.

இளைய மகனாக சக்தி துறுதுறு விளையாட்டுத்தனம் கொண்டவராக வந்து போகிறார். இவரும், நடிப்பில் சில இடங்களில் ஓகே சொல்ல வைத்தாலும், பல இடங்களில் செயற்கைத்தனம் படிந்த பக்கங்களையே படித்துப் போகிறார்கள். சிறியதொரு கதாபாத்திரத்தில் சர்ப்ரைஸ் விஜய் ஆண்டனி! தனது வழக்கமான பாணியுடன் சில அப்பாவித்தனமான முகபாவனைகளையும் காட்டிருக்கிறார். இவர்களைத் தாண்டி, காவ்யா அனில், பாடினி குமார், பாலாஜி சக்திவேல், கருணாஸ், பகவதி பெருமாள், ஜென்சன், தாமரைச்செல்வி, ஆகியோர் அவரவர் பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.






















