தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில், கட்சியை வலுப்படுத்தும் வகையில் தி.மு.க-வில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின். அதன் ஒரு பகுதியாக கட்சியில் இருந்த 77 மாவட்டங்களை 110 ஆக அதிகரித்ததுடன், விரைவில் புதிய மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை அறிவிக்க இருக்கிறார்.
குறிப்பாக சென்னை 7 மாவட்டமாகவும், கோவை, மதுரை, சேலம், திருச்சி, கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்கள் 5 ஆகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல இந்த மாற்றங்களின் அடிப்படையில் ஒருவர் மூன்று முறை மட்டுமே மாவட்டச் செயலாளர்களாக இருக்க முடியும். அத்துடன் 70 வயது வரை மட்டுமே அந்தப் பதவியில் செயல்பட முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதனடிப்படையில் புதுச்சேரியிலும் அமைப்பாளர்கள் பதவிகளை உருவாக்குவது குறித்து திமுக தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. முதல் கட்டமாக புதுச்சேரி நிர்வாகிகளிடம் அதுகுறித்து கருத்து கேட்க திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின்.
தற்போது புதுச்சேரி மாநில அமைப்பாளராக சிவா, காரைக்கால் மாநில அமைப்பாளராக எம்.எல்.ஏ நாஜிம் என இரண்டு அமைப்பாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். அதைப் பிரித்து புதுச்சேரி வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என்றும், காரைக்கால் தனி மாவட்டமாகவும் பிரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகின்றனர் கட்சியின் சீனியர்கள்.
























