கடந்த ஜனவரி மாதம், வெனிசுலாவின் அப்போதைய அதிபர் மதுரோவைக் கைது செய்து, அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
இந்தச் சம்பவத்திற்குப் பின், ட்ரம்பின் டார்கெட் முழுவதும் வெனிசுலாவின் எண்ணெய் மீது இருந்தது.
அமெரிக்கா – வெனிசுலா ஒப்பந்தம்
அதற்கேற்ற மாதிரி, கடந்த 29-ம் தேதி, வெனிசுலாவுடன் எண்ணெய் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுள்ளது அமெரிக்கா. இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…
“அமெரிக்கா வெனிசுலா நாட்டுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தத்தை இப்போது செய்துள்ளது.

எனது வழிகாட்டுதலின்படி, வெளியுறவுத் துறைச் செயலர் மார்கோ ரூபியோவும் பாதுகாப்புத் துறைச் செயலர் பீட் ஹெக்சேத்தும் இதில் இணைந்து செயல்பட்டனர்.
அவர்கள் வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் மற்றும் தனியார்த் துறையுடன் இணைந்து இந்த ஒப்பந்தத்தை முடித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தம் அமெரிக்கர்களுக்கு ஒரு பைசா கூட செலவில்லாமல், வெனிசுலாவில் உள்ள 6,500 கோடி பேரலுக்கும் அதிகமான எண்ணெயின் பெரும் பகுதியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தமானது அமெரிக்காவின் எண்ணெய் இருப்பை இரட்டிப்பிற்கும் மேலாக அதிகரிக்கும்.
























