சிவகாசியில் தவெக 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (ஆகஸ்ட். 23) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கீர்த்தனா, “100 நாள் ஆட்சியில் வரலாற்றில் யாரும் செய்யாத வகையில் ஊழலற்ற ஆட்சியை வழங்கியிருக்கிறார்.
எந்த முதல்வராவது மேடையில் ஏறி நின்று, ‘இனிமேல் ஊழல் நடைபெறாது. ஊழல் நடந்தால் என்னிடம் வந்து சொல்லுங்கள்’ என்று தைரியமாகச் சொல்வார்களா?
அரசியல் மிகவும் கொடூரமாக உள்ளது. சட்டமன்றத்தில் அவர்களது ஃபைலை ஓபன் செய்யவா என்று கேட்டால், ஓபன் செய்யச் சொல்கிறார்கள்.
ஓபன் செய்தால், அவர்கள் சிங்கப்பூரிலோ, துபாயிலோ போய் இருப்பார்கள் என்பது தெரியும். சட்டமன்றத்தில் நேரலை நடக்கக்கூடாது என்று எதிர்க்கட்சியினர் கதறி அழுகிறார்கள்.
‘ஐயய்யோ, எதற்காக நேரலை போடுகிறீர்கள்? வார்த்தையை நீக்குகிறோம் என்று மட்டும்தானே சொல்கிறீர்கள்? ஆனால் அவர்கள் ரீல்ஸ் எடுத்து பயர் விடுகிறார்கள்’ என்று அழு அழு என்று அழுது புலம்புகிறார்கள்.
ஏனென்றால், 2021-இல் அவர்களும் வாக்குறுதிகள் கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று வரை அதை நிறைவேற்றவே இல்லை. இன்று அவர்களின் முகத்திரையை நாம் கிழித்துக் காண்பிக்கிறோம் அல்லவா, அது அவர்களுக்குப் பயமாக இருக்கிறது.
‘ஐயய்யோ, மொத்த கட்சியையும் இவர்கள் எல்லோரும் சேர்ந்து அழித்து விடுவார்களோ’ என்று பயப்படுகிறார்கள். சட்டசபையில் உட்கார்ந்து நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ‘எப்படி இவர்கள் எல்லாம் வந்தார்கள்? ஒன்றுமே புரியவில்லையே’ என்று நினைக்கிறார்கள்.

அவர்களைப் பார்த்து நாம் ‘இவர்களுக்கு மக்கள் எப்படி இவ்வளவு நாள் ஓட்டு போட்டார்கள்?’ என்று நினைப்போம். அவர்களின் பண்ணையார் புத்தியும், குறுநில மன்னர் புத்தியும் போகவே இல்லை.
‘சாமானியர்கள் எல்லாம் எப்படி சட்டசபைக்குள் வந்தார்கள்?’ என்று இன்னும் அவர்களுக்குள்ளே வயித்தெரிச்சல் எரிந்துகொண்டே இருக்கிறது. என்னைப் பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தன. இதற்கு எப்போது ஒரு மேடை கிடைக்கும் என்று நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
ஒரு பெண்மணியாக இருந்தால் அரசியலுக்கு வரக்கூடாதா? ஏன், வந்தாள் கோட்-சூட் போடக்கூடாதா? ஏன் நாங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் பேசக்கூடாதா? அப்படித்தான் போடுவோம்.
ஏன், பண்ணையார்களுக்கும் குறுநில மன்னர்களுக்கும் மட்டும்தான் எழுதி வைக்கப்பட்டிருக்கிறதா கோட் போட வேண்டும் என்று? சாதாரண மக்களாகிய நாங்களும் டை போடுவோம், ஷூ போடுவோம். அதைப் பார்த்துவிட்டு உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

‘ரீல்ஸ் போடுகிறார்கள், ரீல்ஸ் போடுகிறார்கள்… ரீல்ஸ் போட்டே ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்’ என்று புலம்பித் தவித்து, தினமும் என்னைப் பற்றி ஏதாவது ஒன்றைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.
























