<p>ஐக்கிய நாடுகள் சபையில் 193 உறுப்பு நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. இதன் கீழ் இயங்கும் ஆறு உறுப்பு அமைப்புகளில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் விளங்குகிறது. கடந்த 1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, உலக நாடுகள் மத்தியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. </p>
<h2><strong>ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் வரலாறு:</strong></h2>
<p>உலக அமைதியை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பு, தனது நோக்கங்களை அடையத் தவறியதால், இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் ஐநா பாதுகாப்பு கவுன்சில் என்ற பெயரில் புதிய அமைப்பு நிறுவப்பட்டது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதன் மூலம் உறுப்பு நாடுகளுக்கு இடையே இணக்கமான உறவுகளை மேம்படுத்த இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.</p>
<p>ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகிய நாடுகள் இருக்கின்றன. அல்பேனியா, பிரேசில், காபோன், கானா, இந்தியா, அயர்லாந்து, கென்யா, மெக்சிகோ, நார்வே, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளனர். இதில், நிரந்தர பிரதிநிதியாக ஆக இந்தியா தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. </p>
<p>இந்த நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உடனடி சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். அப்படி இல்லை என்றால், அழிவை நோக்கி அமைப்பு சென்றுவிடும் என இந்தியா எச்சரித்துள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ருசிரா கம்போஜ், இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.</p>
<h2><strong>சீர்திருத்தம் கோரும் இந்தியா:</strong></h2>
<p>இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "கடந்த 2000ஆம் ஆண்டு நடந்த மில்லினியம் உச்சி மாநாட்டில், விரிவான சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் என உலகத் தலைவர்கள் உறுதியளித்தனர். உறுதி அளித்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் பற்றிய விவாதங்கள் 1990களின் முற்பகுதியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வருகின்றன. உலகமும் நமது வருங்கால சந்ததியும் இனி காத்திருக்க முடியாது. இன்னும் எவ்வளவு காலம் அவர்கள் காத்திருக்க வேண்டும்?</p>
<p>சீர்திருத்தங்கள் நோக்கி செல்ல வேண்டும். இளைய தலைமுறையினரின் குரல்களுக்கு செவி சாய்ப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க விரும்புகிறேன். வரலாற்று அநீதிகளை சரிசெய்ய வேண்டும். குறிப்பாக ஆப்பிரிக்காவில் வரலாற்று அநீதிகளை சரி செய்ய வேண்டும்" என்றார்.</p>
<p>தொடர்ந்து பேசிய அவர், "பொதுச் சபையின் பன்முகத்தன்மையை பாதுகாப்பு கவுன்சிலில் போதுமான அளவு பிரதிபலிக்க உறுப்பு நாடுகள் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சீர்திருத்தத்திற்கான விவாதத்தை உறுதியான நிலைக்கு நகர்த்துவதற்கு அமைப்பில் இடம்பெற எந்த நாடுகள் தகுதிபெற்றுள்ளது என்பதை கண்டறியவும் பரிசீலனை செய்யவும் உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்" என்றார்.</p>
<p> </p>

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports



























waste of time